“புதுச்சேரியில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் சட்டத்தை மீறி தொடர்ச்சியாக பேனர்களை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுத்தபோது, சட்டவிரோத பேனர்களை புதுச்சேரி முழுவதும் அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனால் அவற்றை அகற்றாமல், அகற்றிவிட்டதாக நீதிமன்றத்தில் பொய்யான அறிக்கையை தாக்கல் செய்தனர் தலைமைச் செயலரும், மாவட்ட ஆட்சியரும். அதை எதிர்த்து கடந்த ஆண்டு மீண்டும் நான் நீதிமன்றம் சென்றேன். அப்போதும் பேனர்களை அகற்றி விட்டதாக பொய்யான பதில் மனுவை தாக்கல் செய்கிறது புதுச்சேரி அரசு. தற்போது ஆதாரங்களுடன் மீண்டும் நீதிமன்றம் சென்றிருக்கிறேன்” என்கிறார் மக்கள் உரிமை இயக்கத்தின் செயலாளர் ஜெகன்நாதன். இந்த நிலையில்தான் புதுச்சேரி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சந்திரமோகன், புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அதில், “சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 01.10.2021 மற்றும் 28.04.2022 அன்று பிறப்பித்த உத்தரவில், பொதுமக்கள் நடந்து செல்லும் சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள், அலங்கார வளைவுகள், ஹோர்டிங்ஸ், கட்-அவுட்கள், தட்டிகளை அகற்றுவதற்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் புதுச்சேரியின் முக்கிய சந்திப்புகளிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும், பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள், அலங்கார வளைவுகள், ஹோர்டிங்ஸ், கட்-அவுட்கள், தட்டிகள் இருக்கின்றன. இது உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் செயல். எனவே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள், அலங்கார வளைவுகள், ஹோர்டிங்ஸ், கட்-அவுட்கள், தட்டிகளை உடனே அகற்ற வேண்டும். இதை மீறி பேனர் வைப்பதில் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.