தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி – சுக ஸ்தானத்தில் புதன், ராகு, செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், குரு, சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்: 01-05-2024 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 07-05-2024 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-05-2024 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 20-05-2024 அன்று சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 24-05-2024 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 31-05-2024 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் நடந்து கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது. திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள்.
குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை. முயற்சிகள் தாமதப்படும்.
கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். அரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.
மூலம்: இந்த மாதம் முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம்.
பூராடம்: இந்த மாதம் உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர். தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும்.
பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15 | அதிர்ஷ்ட தினங்கள்: 07, 08
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |