மத்தியப் பிரதேசத்தில் ஏழு வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பம் அரசு கூறிய உதவிக்காக ஐந்து ஆண்டுகளாகப் போராடிவருவது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. முன்னதாக, மண்ட்சூர் மாவட்டத்தில் 2018 ஜூன் 26-ம் தேதியன்று பள்ளிக்கு அருகிலேயே இரண்டு ஆண்களால் கடத்திச் செல்லப்பட்ட ஏழு வயது சிறுமி, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளானார். மேலும், அவர்கள் அந்தச் சிறுமியின் கழுத்தையும் அறுத்தனர். ஆனாலும், நல்லவேளையாக சிறுமி உயிர்பிழைத்தார்.
அந்த சமயத்தில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து, சம்பவம் நடந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆராய்ந்த போலீஸார், அடுத்த 24 மணிநேரத்துக்குள் குற்றவாளிகளைக் கைதுசெய்தனர். பின்னர் இது தொடர்பான வழக்கில், இரண்டு குற்றவாளிகளுக்கும் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதுவொருபுறமிருக்க, அப்போது ஆட்சியிலிருந்த முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க அரசு, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் சகோதரியின் படிப்புக்கு முழு நிதியுதவி செய்வதாகவும், அவர்களின் குடும்பத்துக்கு வீடு தருவதாகவும் உறுதியளித்தது. அதன்படி, இந்தூரில் அவர்களுக்கு வீடும் கிடைத்தது.