மக்களவைத் தேர்தலுக்கு பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள பா.ஜ.க. இரண்டாம் கட்ட பட்டியலை வெளியிட இருக்கிறது. சில மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மகாராஷ்டிராவில் கூட்டணியில் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இரு கட்சிகளும் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்று கூறி பா.ஜ.க வுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆனால் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதியில் 34 தொகுதியில் போட்டியிட பா.ஜ.க விரும்புகிறது.
கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு 8 முதல் 10 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதிகளும் கொடுக்க தயாராக இருப்பதாக பா.ஜ.க கூறி வருகிறது. இது தொடர்பாக நடந்த பல சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் அமித் ஷா மும்பை வந்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்படி இருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால் சிவசேனா தலைவர்கள் பா.ஜ.க தலைமைக்கு எதிராக விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். பா.ஜ.க தலைவர்கள் டெல்லி சென்று இப்பிரச்னை குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசித்தனர்.
சிவசேனா எம்.எல்.ஏ.ஷிர்சாத் பா.ஜ.க.வை விமர்சிக்கும் விதமாக அளித்துள்ள பேட்டியில், ”உத்தவ் தாக்கரேயிக்கு எதிராக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கி இருக்காவிட்டால், இந்நேரம் 105 எம்.எல்.ஏ.க்களை கொண்டிருக்கும் பா.ஜ.க. எதிர்க்கட்சி வரிசையில் தான் இருந்திருக்கும். ஏக்நாத் ஷிண்டேயால்தான் பா.ஜ.க அதிகாரத்தில் இருக்கிறது. பாஜக-வால்தான் ஷிண்டே முதல்வராக இருக்கிறார். இரண்டு உண்மைதான். எனவே இரண்டு பேரும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது” என்று குறிப்பிட்டார்.
தொகுதி பங்கீடு பிரச்னைக்கு தீர்வு காண அமித் ஷா மகாராஷ்டிரா கூட்டணி தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை டெல்லிக்கு வரும்படி அழைத்தார். அவர்கள் மூன்று பேருடன் நேற்று இரவு அமித் ஷா தனது வீட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பல மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இப்பேச்சுவார்த்தையில் பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டாவும் கலந்து கொண்டார். சிவசேனா-வுக்கு கொடுக்கும் தொகுதிகளை எங்களுக்கும் கொடுக்கவேண்டும் என்று அஜித் பவார் கூறிக்கொண்டிருக்கிறார். இதனால் உடன்பாடு எட்டப்படவில்லை. தொகுதி பங்கீடு பிரச்னையால் மகாராஷ்டிரா பா.ஜ.க வேட்பாளர்களை அறிவிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY