புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே இருக்கும் லெம்பலக்குடியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில், புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை திறந்து வைக்க வருகை தந்த தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வருகை தந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பின், புதுக்கோட்டையில் உள்ள ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சிறுபான்மையினர் நலனில் அக்கறை உள்ள ஆட்சி என்று நிரூபிக்கும் வகையில், அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. மசூதியாக இருந்தாலும், தர்காவாக இருந்தாலும், தேவாலயமாக இருந்தாலும், அடக்க ஸ்தலமாக இருந்தாலும் பாதுகாப்புக்கும், மராமத்து செய்கின்ற பணிக்காகவும் நிதி உதவியும் அளித்து வருகின்றோம். உலமாக்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றோம். இலங்கை தமிழர்களின் முகாம்கள் 106 இருக்கின்றன. அந்த முகாம்களில் உள்ள 20,000 குடும்பங்களுக்கும், அதில் உள்ள அறுபதாயிரம் மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அகதிகள் என்ற வார்த்தையை எடுத்து விட்டு, `மறுவாழ்வு முகாம்” என்ற பெயரைக் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு. கடல்தான் நம்மை பிரித்துள்ளது. ஆனால், தமிழர் என்ற உறவு நம்மை எப்போதும் இணைத்துதான் உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசிடம் அனுப்பியுள்ளோம். முதற்கட்டமாக இலங்கையில் இருக்கக்கூடிய அரசாங்கம் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கையை கூர்ந்து பார்த்து, அந்த உரிமைகள் எல்லாம் அவர் பெற்றுக் கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையோடு, ‘இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்கவில்லை என்றால் கேள்விக்குறியாக இருந்து விடுவோம்’ என்ற எண்ணத்தில், சென்ற மாதம் இலங்கை தூதுகரத்தில் இருந்து ஆளுநரும், நானும் கலந்துகொண்டு முதல் முதலாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 200 பேரை தேர்வு செய்து இலங்கை அரசு கொடுக்கப்பட்ட குடியுரிமை மூலம், அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டின் சார்பில் முதற்கட்டமாக வந்தவர்களுக்கு உரிமைகள் வழங்குவதற்கான குழு அமைத்து சட்டத்துறை அமைச்சர் ஆலோசனைப்படி சட்டக் குழு ஒன்று அமைத்து தீர்வு காணப்படுகிறது.