ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளா, கடந்த 2021-ல் தெலங்கானாவில், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினர். அன்று முதல், சந்திரசேகர ராவுக்கு எதிராகத் தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்த ஷர்மிளா, திடீரென தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி காங்கிரஸுக்கு ஆதரவளித்தார்.
அதோடு, ஷர்மிளா தனது கட்சியைக் காங்கிரஸுடன் இணைக்கப் போவதாகவும் பேச்சுக்கள் வந்தன. அதைத்தொடர்ந்து, தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்று முதல்முறையாக ஆட்சியமைத்ததும், ஷர்மிளா காங்கிரஸில் இணைவார் என்று மீண்டும் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், இந்த முறை தெலங்கானாவில் அல்ல, ஆந்திராவில்.