மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் சூரியன், சுக்கிரன், புதன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் – என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 15-05-2024 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: எதிலும் துணிவுடன் முடிவு எடுக்கும் குணமுள்ள மேஷராசி அன்பர்களே… நீங்கள் பயமின்றி எந்த காரியத்திலும் இறங்கலாம். இந்த வாரம் அவசரமாக எதையும் செய்ய தோன்றும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்கப் பெறும். ஆனால் வீண் வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவும். வாடிக்கையாளர்களிடம் சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக செய்யும் வேலைகளில் தடை ஏற்படலாம். பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும்.
கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும்.
பரிகாரம்: முருகனை வணங்கி வர எல்லா பிரச்சினைகளிலும் சுமூக முடிவு ஏற்படும். காரிய தடைகள் நீங்கும்.
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை – ராசியில் குரு, சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 15-05-2024 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்: லட்சியத்தில் உறுதியான ரிஷப ராசி அன்பர்களே… நீங்கள் அவசரப்படுவதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த வாரம் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை.
கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை ஏற்படலாம். பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யபோய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம். சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.
பரிகாரம்: பெருமாள் கோவிலில் உள்ள தாயாரை பூஜித்து வணங்கி வர காரியங்கள் சாதகமாக முடியும். கடன் பிரச்சினை தீரும்.
மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
கிரகநிலை – சுக ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் – லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் – அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 15-05-2024 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: அபார அறிவாற்றலும், ஆராய்ச்சி நோக்குடன் எதையும் பார்த்து செய்யும் குணமுடைய மிதுனராசி அன்பர்களே… இந்த வாரம் எல்லாவிதமான முன்னேற்றத்தையும் தரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும்.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும்.
குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும், கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும்.
பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். தொலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி தீபம் ஏற்றி வணங்க காரிய தடை நீங்கும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |