ஆனால், “மற்ற மாநிலங்களில் பா.ஜ.க செய்யும் மதவாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடவில்லை என்பதால், ஊழல் ஒழிப்பு முகமூடி அணிந்து வருகிறார்கள்’’ என விமர்சிக்கிறார் திமுக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் பொள்ளாச்சி சித்திக். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கு என்ன அரசியல் புரிதல் இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் அண்ணாமலைக்குப் புரிதல் இருக்கிறது. ஊழல் ஊழல் என்கிறார். ஆதாரம் கேட்டால் விஜயபாரத்திலிருந்து எடுத்துக்காட்டுவார். நோட்டாவைவிட குறைவாக ஓட்டு வாங்கும் பா.ஜ.க முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளால் தி.மு.க-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
ஒருவேளை அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால், நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கு தொடரலாமே… ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்து தி.மு.க வாதாடி வென்றதே… அதுபோல அண்ணாமலையும் செய்யவேண்டியதுதானே… யார் தடுத்தார்கள்… அண்ணாமலையிடம் எங்களுக்கும் சில கேள்விகள் இருக்கின்றன. பா.ஜ.க ஆட்சியில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 277 எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியிருக்கிறீர்கள், அதற்கு 2,000 கோடி ரூபாய் முதல் 3,000 கோடி ரூபாய் வரை செலவிட்டிருக்கிறார்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்தப் பணம் எங்கிருந்து வந்தது… கொரோனா காலத்தில் பிஎம் கேர்ஸ் நிதி திரட்டினார்கள். மூன்று நாள்களில் 3,500 கோடி ரூபாய் பணம் கிடைத்ததாகச் சொல்லப்பட்டது. பிஎம் கேர்ஸ் அரசு நிறுவனம் அல்ல என நீதிமன்றத்தில் கூறினார்கள். அப்படியானால் பிரதமர் படம் போட்டு, அரசு முத்திரையுடன் எப்படிப் பணம் வசூலித்தார்கள்… யார் அனுமதி கொடுத்தது… அந்தப் பணம் என்ன ஆனது… கர்நாடகாவில் முந்தைய பொம்மை அரசுமீது 40% கமிஷன் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.