ஈரோட்டில் பார்க் ரோடு, மூலப்பட்டறை, குப்பைக்காடு போன்ற பகுதிகளில் சரக்கு லாரி புக்கிங், டெலிவரி குடோன், ரெகுலர் லாரி சர்வீஸ் போன்ற 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கு 7,000-க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் பொருள்களை ஏற்றி, இறக்கும் வேலை செய்துவருகின்றனர். புக்கிங் அலுவலகம் மூலம் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் ஜவுளி, மஞ்சள், விளைபொருள்கள், மாட்டுத்தீவனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் ஈரோட்டிலிருந்து அனுப்பிவைக்கப்படுகின்றன.
ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் சங்கத்துடன் இணைந்து அனைத்துத் தொழிற்சங்கங்களும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு உள்ளிட்ட பிற சலுகைகளை ஒப்பந்தம் செய்கின்றனர். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, தற்போது வழங்கும் கூலியிலிருந்து 41 சதவிகித உயர்வு, இரவு 8 மணிக்கு மேல் பொருள்கள் ஏற்றி, இறக்குவதாக இருந்தால் இரவு சாப்பாட்டுக்கு ரூ.75 வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் 3-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இது குறித்து தமிழக பொது தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச்செயலாளர் கே.எஸ்.தென்னரசு, “கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் கூலி உயர்வு வழங்க முன்வராததால் 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டு, ஒப்பந்தம் போடப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும். ஒரு டன் லோடு ஏற்ற ரூ.120 தருகின்றனர்.
இதனுடன் சேர்ந்து 41 சதவிகித கூலி உயர்வு கேட்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்தால் தினமும் ரூ.100 கோடி மதிப்பிலான ஜவுளி, மஞ்சள், உணவப்பொருள்கள், விளைபொருள்கள், கால்நடைத்தீவனங்கள் எனப் பல்வேறு சரக்குகளை ஏற்றி, இறக்க முடியவில்லை. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ரூ.200 கோடி மதிப்பிலான பொருள்கள் குடோன்களிலும் லாரிகளிலும் தேக்கமடைந்திருக்கின்றன” என்றார்.