2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கூட்டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அ.தி.மு.க தலைமையில் சில கட்சிகள் மற்றும், பா.ஜ.க தலைமையிலான கட்சிகள் போட்டியிடுவதற்கான சூழல் தற்போது நிலவுவதால், மும்முனை போட்டிக்கான வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. இதனைத் தவிர்த்து நாம் தமிழர் கட்சியும் வழக்கம்போல் தனித்துக் களம் காண உள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தஞ்சாவூரைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த ரேஸில் முன்னணியில் இருப்பது யார் என தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
சிட்டிங் எம்.பி., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தொழிலதிபரும், மாநில வர்த்தகப் பிரிவின் துணைத் தலைவருமான பழஞ்சூர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., மகேஷ் கிருஷ்ணசாமி, மன்னார்குடி நகரச் செயலாளரான வீரா.கணேசன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் எப்படியும் சீட் பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் தலைமையில் காய் நகர்த்தி வருகின்றனராம்.