தமிழக பா.ஜ.க-வின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் அரவிந்த் மேனன். “கூட்டணி கட்சிகளுடன் சீட் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் வியூகம் என தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் அனைத்தையும் இனி மேனன்தான் கவனிக்கப் போகிறார்” என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில். அதற்கேற்ப தமிழகம் முழுவதும் சத்தமில்லாமல் சுற்றுப்பயணமும் செய்யத் தொடங்கிவிட்டார் மேனன். யார் இந்த அரவிந்த் மேனன்…. நாமும் விசாரித்தோம்.
கேரள மாநிலம் குருவாயூர் தான் அரவிந்த் மேனனுக்கு சொந்த ஊர். சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர், வாரணாசியில் படிப்பை முடித்துவிட்டு, மத்திய பிரதேச மாநிலம் இந்தோருக்கு குடிபெயர்ந்தார். 2003-ல், இந்தோர் நகருக்கான ஆர்.எஸ்.எஸ் பிரசாகராக நியமிக்கப்பட்டவர், அடுத்த 13 ஆண்டுகளில் மத்திய பிரதேசத்தின் அசைக்க முடியாத அதிகார மையமாக உருவானார் என்கிறார்கள் பா.ஜ.க வட்டாரத்தில்.
நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் சீனியர் தலைவர்கள் சிலர், “பிறப்பால் ஒரு மலையாளியாக இருந்தாலும், வாரணாசியில் பல ஆண்டுகள் இருந்ததால், இந்தி மொழி பேசவும் எழுதவும் அரவிந்த் மேனனுக்கு நன்றாகவே தெரியும். அதேகாலக்கட்டத்தில், பெங்காலி மொழியையும் பயின்றிருந்தார். இந்தோர் நகரிலிருந்துதான் மேனனின் ஆரம்பகால அரசியல் பணி தொடங்கியது. குருவாயூரிலிருந்து வந்ததால், “குருவாயூர் மேனன்’ என்றுதான் அவரை அழைப்பார்கள். பின்னாளில் அந்த பெயரே அவரது அடையாளமாகிப் போனது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உதவி செயலாளராக பணி உயர்வு பெற்றவர், ஜபல்பூர் ஏரியாவுக்கான பொறுப்பாளராக நியமனமானார். அப்போதுதான், ஆர்.எஸ்.எஸ் உயர் பொறுப்பில் இருந்தவர்களுடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. பா.ஜ.க-வின் இளைஞரணி தலைவராக சிவராஜ் சிங் செளகான் இருந்தபோது, அணியின் செயலாளராகவும் பணியாற்றினார். அந்த நட்பு, மத்திய பிரதேச அரசியலையே மாற்றியது.
2011-ல், மத்திய பிரதேச பா.ஜ.க-வின் அமைப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் அரவிந்த் மேனன். கட்சியை பலப்படுத்தும் பணிகளில் அவர் தீவிரம் காட்டிய நேரத்தில், ஒரு பெண் விவகாரமும் அவர்மீது வெடித்தது. ‘என்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டார் மேனன். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் புகாரளித்தால் ஜபல்பூர் போலீஸார் ஏற்க மறுக்கிறார்கள்’ என மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு பெண் புகாரளிக்கவும், விவகாரம் மாநில அரசியலில் பற்றி எரிந்தது.