மணிப்பூரில் இரு இனத்தவருக்கு இடையே கடந்த மே 4-ம் தேதி மோதல் வெடித்து, இரண்டு மாதங்களுக்கு மேலாக பிரச்னை நீடித்துவருகிறது. இந்த காலக்கட்டத்தில், ஏராளமான தேவாலயங்களும் கோயில்களும் எரித்து சாம்பலாக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளும் கடைகளையும் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைத்து கொளுத்தப்பட்டும் நாசமாக்கப்பட்டிருக்கின்றன. இரு தரப்பினரிடையிலான மோதல்களில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் என உலகையே சுற்றிவந்திருக்கிறார் பிரதமர் மோடி. அதனால், மணிப்பூர் பற்றி யோசிக்க அவருக்கு நேரமில்லை என சாடின எதிர்க்கட்சிகள். ஆனால், மணிப்பூர் விவகாரத்தில் இப்போது அவர் மௌனத்தைக் கலைத்திருக்கிறார்.
மணிப்பூரில் குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி, சாலையில் ஊர்லமாக இழுத்துச்செல்லும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில்தான், முதன்முதலாக மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி வாய்திறந்திருக்கிறார்.