ஜோதிடம்

1175863.jpg

மிதுனம் நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டக் கூடாது என்பதை அறிந்த நீங்கள், உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்கள். செய்நன்றியை ஒருபோதும் மறவாத நீங்கள், தன்னை எதிரியாக நினைத்தவர்களுக்கும் நல்லதே நினைக்கும் குணம் படைத்தவர்கள்.

உங்கள் ராசிக்கு தைரிய வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் எதையும் தள்ளிப் போடாமல் தெளிவாக முடிவெடுப்பீர்கள். ரத்த அழுத்தம், நீரிழிவு நோயெல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வரும். இளைய சகோதர வகையில் இருந்த சிக்கல்கள் தீரும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 30.4.2024 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிலே வலுவாக காணப்படுவதால் திடீர் பணவரவு உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதரர் உதவ முன்வருவார். பெரிய பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும்.

1.5.2024 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளையும் பார்க்க வேண்டி வரும். அநாவசிய செலவுகளை குறைக்கப் பாருங்கள். முன்பின் அறியாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். ஆனால் வீடு, மனை விற்பது வாங்குவது லாபகரமாக முடிவடையும். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

ராகு பகவான் இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பெரிய பதவிகள் தேடி வரும். சிலர் புது வேலைக்கு மாறுவீர்கள்.

கேது பகவான் இந்த வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வாகன விபத்துகள், காரியத் தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்களும் வந்து போகும். அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.

சனி பகவான் இந்த வருடம் முழுக்க வரை ராசிக்கு 9-ம் வீட்டில் தொடர்வதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தந்தையின் உடல் நிலை பாதிக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். அக்கம் -பக்கம் வீட்டாருடன் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும்.

வியாபாரிகளே! மார்ச் மாதத்திலிருந்து கணிசமாக லாபம் உயரும். வேலையாட்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்காதீர்கள். பழைய சரக்கு விற்றுத் தீரும். பழைய பாக்கிகளும் வசூலாகும். சலுகை திட்டங்கள் மூலம் புது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பீர்கள். பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினாலும் ஒத்துழைப்பார்கள். ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதுக் கிளைகள் தொடங்கும் வாய்ப்பும் வரும். கமிஷன், உணவு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களே! 1.5.2024 முதல் வீண் பழிகளை சுமக்க வேண்டி வரும். நேரம், காலம் பார்க்காமல் உழைத்தும் கடைசியில் மிஞ்சியதென்னவோ கெட்ட பெயர் தான் என்று அலுத்துக் கொள்ள வேண்டி வரும். உங்களை பாடாய்படுத்திய உயரதிகாரி இடம் மாறுவார். நல்ல மேலதிகாரி பணியில் வந்து சேர்வார். புது சலுகைகளும் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் வேறு நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். ஜூன், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் சம்பள உயர்வு உண்டு.

இந்த புத்தாண்டு சின்ன சின்ன ஏற்றத்தாழ்வுகளையும், செலவுகளையும் கொடுத்து வந்தாலும் உங்களின் வளர்ச்சி பணிகள் தொய்வில்லாமல் தொடர்வதாக அமையும்.

பரிகாரம்: கடலூர் மாவட்டம், எழுமேடு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபச்சைவாழியம்மனை சென்று வணங்குங்கள். ஆதரவற்ற மாணவியின் கல்விக் கட்டணத்தை செலுத்துங்கள். செல்வம் பெருகும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *