Chennai
oi-Vignesh Selvaraj
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, இங்கு, தேசியக் கல்விக்கொள்கையை முன்வைத்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆர்.என்.ரவி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகளை குறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் கேட்டறிந்தார்.
இதற்கிடையே கடந்த ஜூலை 18ஆம் தேதி அமைச்சர் பொன்முடி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன் காரணமாக அன்று நடைபெற்ற திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை. ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கினார்.
இந்நிலையில், இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்துகிறார். பொது பாடத்திட்டம் குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார் அமைச்சர் பொன்முடி.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. நேற்று ஆளுநர் ரவி பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்த இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலமைப்பு இயந்திரம் தோல்வி.. ஜனாதிபதி ஆட்சிக்கான நேரம்.. மணிப்பூர் கொடூரத்தால் கமல்ஹாசன் ஆவேசம்!
English summary
Higher Education Minister Ponmudi will hold a consultation with the Vice Chancellors of Government Universities today. This consultation is going to be held at Chennai Anna University.
Story first published: Friday, July 21, 2023, 8:56 [IST]