Bangalore
oi-Nantha Kumar R
பெங்களூர்: கர்நாடகாவில் க்ருஹ லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கான விண்ணப்பம் ஜூலை 17 அல்லது ஜூலை 19 ல் தொடங்கப்பட உள்ள நிலையில் விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது குறித்து அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை பிடித்தது. முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி தனது 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரிசி இலவசம் என்ற திட்டத்தை செயல்படுத்த அரிசி தட்டுப்பாடு உள்ளதால் பணமாக வழங்கப்பட்டு வருகிறது.
மாறாக க்ருஹ ஜோதி திட்டத்தில் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், க்ருஹ லட்சுமி திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை, யுவநிதி என்ற பெயரில் டிகிரி முடித்து வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.1,500 முதல் 3 ஆண்டு வழங்கப்படும் என்ற அறிவிப்புகளை செயல்படுத்தப்பட உள்ளது.
இதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த கர்நாடகா அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கான பதிவு நடைமுறை விரைவில் தொடங்கும் என முதல்வர் சித்தராமையா அறிவித்து இருந்தார்.
பெண்களுக்கு மாதம் ரூ. 1000.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.! உரிமை தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்
இந்நிலையில் தான் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து கர்நாடகா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பெங்களூரில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
க்ருஹ லட்சுமி திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கான ரிஜிஸ்ட்ரேஷன் ஜூலை 17ல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தை தொடங்கி வைக்க காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களான சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் வந்தால் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்கள்.
ஒருவேளை தேசிய தலைவர்கள் வராமல் இருந்தால் இந்த திட்ட ரிஜிஸ்ட்ரேஷன் ஜூலை 19 ம் தேதி மாலை 5 மணிக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்கள் தொடங்கி வைப்பார்கள். இந்த திட்டத்தில் இணைய கர்நாடகா ஒன், கிராம ஒன், பெங்களூர் ஒன், பாபூஜி சேவா மையம் ஆகியவற்றில் விண்ணப்பம் செய்யலாம். பிபிஎல், ஏபிஎல், அந்த்யோத்யா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி கட்டாதவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
விண்ணப்பம் செய்யும்போது ரேஷன் கார்டு, ஆதார் எண் கட்டாயமாகும். ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைக்காத நிலையில் பிற வங்கி கணக்கிலும் பணம் செலுத்தப்படும். ஆனால் அந்த வங்கி கணக்கை சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்த பிறகே அதனை மேற்கொள்வோம். மேலும் அந்த வங்கி கணக்கு எண் சம்பந்தப்பட்ட கடும்ப தலைவிக்கு சொந்தமானதா இல்லையா? என்பது அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் உறுதி செய்யப்படும்.
மேலும் விண்ணப்பம் செய்யும்போது வங்கி கணக்கு புத்தகத்தை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை கையில் வைத்திருக்க வேண்டும். மாநிலத்தில் 1.28 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ளது. இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.2000 நேரடியாக வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.
விண்ணப்ப பதிவு தொடர்பாக ஆதார் கார்டு, ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு விண்ணப்ப நேரம், நாள், விண்ணப்பம் செய்ய ணே்டிய இடம் உள்ளிட்டவை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வேளையில் குடும்ப தலைவிகள் சென்றால் போதுமானது. ஒருவேளை குறித்த நேரம் செல்ல முடியாவிட்டால் மாலை 5 மணிக்கு மேல் குறிப்பிட்ட மையத்துக்கு சென்று விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
இந்த சமயத்தில் யாரும் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 8147500500 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். இல்லாவிட்டால் 1902 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ” என அவர் கூறினார்.
English summary
Under the Gruha Lakshmi scheme in Karnataka, Rs.2000 per month is to be given to the woman heads of households. How to apply as the application for this scheme is scheduled to start on July 17 or July 19? Minister Lakshmi Heppalkar has given important information.