“பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க இடம்பெறும்” என்று தெரிவித்துள்ளார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்.
இன்று மதுரை வந்திருந்த டி.டி.வி.தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்து, பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
`பா.ஜ.க-வுடன் அ.ம.மு.க கூட்டணியா?’ என்ற கேள்விக்கு, “வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது. சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறேன், உறுதியான பிறகு சொல்கிறேன். எதையும் இப்போது சொல்ல இயலாது” என்றவரிடம், `ஆளுநரின் செயல்பாடு எப்படியுள்ளது?’ என்று கேட்டதற்கு, “அந்தப் பதவியின் மாண்புக்கு இழுக்கு வராமல், ஆளுநர் நடந்துகொள்ள வேண்டும். அவர் அதனைப் பின்பற்றுவார் என்று நம்புகிறோம்” என்றார்.
`அ.தி.மு.க ஒண்றிணையும் என சசிகலா கூறிவருகிறாரே?’ என்று கேட்டதற்கு, “பழனிசாமியோடு சேர்ந்து பயணிக்க வாய்ப்பில்லை, அ.ம.மு.க நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், எனக்கும் விருப்பம் இல்லை. அ.தி.மு.க இணைப்பு குறித்து அவர்கள் எதனடிப்படையில் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. அம்மாவின் உண்மையான தொண்டர்களாகத் தங்களை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அது நடக்கும். அ.ம.மு.க தொடங்கப்பட காரணமான தொண்டர்களின், நிர்வாகிகளின் விருப்பத்தை மீறி நான் எந்த முடிவையும் எடுக்க முடியாது” என பதிலளித்தார்.
`அ.ம.மு.க-விலிருந்து நிர்வாகிகள் வெளியேறி வருகிறார்களே… அது குறித்து என்ன சொல்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, “கடந்த மூன்று ஆண்டுகளாகப் பெரிய பெரிய ஆட்கள் போனாலும், அதைவிட அந்தப் பகுதியில் இயக்கம் வலுவாகத்தான் உள்ளது. கட்சியிலிருந்து வெளியே சென்றவர்களோடு ஆயிரம் பேர் சென்றாலும்… 2,000 பேர் புதிதாக உள்ளே வருகிறார்கள், புதிய நிர்வாகிகள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்” என்றார்.
`நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?’ என்ற கேள்விக்கு, “தனிப்பட்ட முறையில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை, எங்கள் நிர்வாகிகளும், தொண்டர்களும் நான் போட்டியிட வேண்டும் என்கிறார்கள், அதனை பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறேன். தேனி தொகுதியில் போட்டியிடுவேன் என எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், இன்னும் அது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. அப்படி எடுத்தால் அதை மதுரையில் வைத்து அறிவிப்பேன். கூட்டணி உறுதியான பிறகுதான் சொல்ல முடியும், பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க இடம்பெறும், இல்லாதபட்சத்தில் தனித்துப் போட்டியிடும். நாங்கள் யாருக்கும் அடிபணிந்து செல்கின்ற இயக்கம் கிடையாது. ஜெயலலிதாவின் கொள்கையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் இயக்கம் அ.ம.மு.க. உண்மையான அம்மாவின் ஆட்சியை அமைக்கும் வரை நானும் என்னுடன் பணியாற்றும் அனைத்து தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிலிருந்து மாற மாட்டோம்.
மத்தியில் யார் பிரதமர் என்கிற அடிப்படையில்தான் தேர்தல் முடிவு இருக்கும். தமிழகத்தில் தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான மனநிலை மக்களிடம் உள்ளது. அதை அறுவடை செய்யும் பணியைத்தான் நாங்கள் மேற்கொள்வோம். ராமர் கோயில் விவகாரத்தில் அத்வானி காலத்தில் யாத்திரை நடத்தியது அரசியல் நோக்கமாக இருந்தாலும், அது ஆன்மிக விஷயம். இந்தியாவிலுள்ள அனைவரும் மதங்களைத் தாண்டி ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என விருப்பப்பட்டார்கள், கட்டப்பட்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ராமர் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்ட முடியும் என ஜெயலலிதா கேட்டிருக்கிறார்… அவரும் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கூறி வந்தார். ராமர் கோயில் வட இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் எப்படி இருக்கும் என்பது தேர்தலுக்குப் பின்புதான் தெரியவரும்.” என்றார்.
‘தமிழகத்தில் பா.ஜ.க வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு, “எந்தக் கட்சியும் தாங்கள் வளர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், மனதில் இடம் பெறுவதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அனைத்து கட்சிகளின் பலம் தெரிந்துவிடும். பா.ஜ.க தமிழகத்தில் வளர்ந்திருக்கிறார்களா… இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY