Chennai
oi-Noorul Ahamed Jahaber Ali
சென்னை: கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்து இருக்கும் நிலையில், அதில் கட்டிடம், நூல்கள் என எதற்கு எவ்வளவு செலவானது? எந்தெந்த தளத்தில் என்னென்ன சிறப்புகள் உள்ளன என்பதை விரிவாக பார்ப்போம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஜூன் 3 ஆம் தேதி மதுரையில் நூலகம் கட்டப்படும் என்று அறிவித்தார். அதை தொடர்ந்து சுமார் ஒரே ஆண்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது மதுரை புதுநத்தம் சாலையில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுரடியில் மிகப் பிரம்மாண்டமாக நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது.
கீழ்த் தளம் மற்றும் தரை தளம் என இந்த நூலகத்தில் மொத்தமாக 8 தளங்கள் இதில் இடம்பெற்று உள்ளன. இந்த நூலகம் மொத்தமாக 215 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நூலகத்தில் ஒரே இடத்தில் சுமார் 3.30 லட்சம் புத்தகங்கள் இங்கு உள்ளன. இதற்கான செலவுகளை தற்போது பார்ப்போம்.
செலவுகள்:
– நூலக கட்டிடம் கட்டுவதற்கு ரூ.114 கோடி செலவிடப்பட்டது.
– புத்தகங்களை வாங்குவதற்காக ரூ.60 கோடி நிதி செலவிடப்பட்டு உள்ளது.
– ரூ.18 கோடிக்குத் தளவாடப் பொருட்கள் வாங்கப்பட்டு உள்ளன.
– புத்தக அலமாரிகளுக்காக ரூ.1.30 கோடி செலவிடப்பட்டு இருக்கிறது.
புத்தகங்கள்: இந்த நூலகத்தில் தன் வரலாறு, அரசியல், இலக்கியம், குழந்தை இலக்கியங்கள், அறிவியல், விஞ்ஞானம் பொருளாதாரம், பண்பாடு என துறை வாரியாகப் பிரித்து அடுக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல் இந்த நூலகம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. நூல்களை பெறுவதற்காகவும், திருப்பி வழங்குவதற்காகவும் ஒரு பிரிவு உள்ளது. சொந்தமாக பாட நூல்களைக் எடுத்து வந்து படிப்பதற்கான ஒரு தனிப் பிரிவும் இங்கு உள்ளது.
குழந்தைகள் பயன்பாட்டுக்காக ஒரு பிரிவு, நாளிதழ்கள் மற்றும் வார, மாத இதழ்களைப் படிப்பதற்காக ஒரு பிரிவு, கருணாநிதியின் படைப்புகளுக்காகவே ஒரு தனியான பிரிவு, ஆய்வாளர்களுக்காக ஒரு பிரிவு, அரிய நூல்களுக்காக ஒரு பிரிவு எனப் பல பிரிவுகள் உள்ளன.
தவிர போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காகவே ஒரு பிரிவு, பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு பிரிவு என மிக நேர்த்தியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் தரை தளத்தில் கலைக்களஞ்சியமும் 200 பேர் அமரக்கூடிய அளவுக்கு இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடமும் உள்ளது. இதில் முதல் தளம் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டது. 4 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்காக ஒலி மற்றும் ஒளிக் காட்சிகளிலான கார்ட்டூன் கதாபாத்திரங்களின் திரை வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது.
அதே தளத்தில் கருணாநிதியின் படைப்புகளுக்கான தனி பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2 வது தளத்தில் 62,000 புத்தகங்களுடன் தமிழ் இலக்கியத்திற்கான பகுதி உள்ளது. 3 வது தளத்தில் ஆங்கில புத்தகங்களும் ஆராய்ச்சி நூல்கள், இதழ்கள் பிரிவு நூல்களும், தமிழ் நூல்கள் பிரிவுகளும் இயங்க இருக்கின்றன.
அறிவு தீ பரவ போகிறது.. கல்வியில் தமிழகம் சிறக்க கருணாநிதியே காரணம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காகவே 4 ஆம் தளம் அமைக்கப்பட்டு உள்ளது. 5 வது தளத்தில் நூல்கள் மற்றும் குறிப்புதவி நூல்கள் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு ஒலி, ஒளி காட்சியகப் பிரிவும் உள்ளது. 6 வது தளத்தில் நூலகத்தின் நிர்வாகப் பிரிவு உள்ளது. 7ஆம் தளத்தில் வேறு சில பிரிவுகள் என இந்த நூலகத்தில் 8 தளங்கள் உள்ளன.
English summary
TN Chief Minister MK Stalin has inaugurated the Kalaignar Centenary Library in Madurai, let see what is the cost of the building and books?
Story first published: Saturday, July 15, 2023, 19:08 [IST]