Chennai
oi-Velmurugan P
சென்னை: சென்னை கடற்கரை- வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை, பரங்கிமலை வரை எப்போது நீட்டிக்கப்படும் என்கின்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது- இந்நிலையில் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் விரிவுப்பணி இந்த மாத இறுதிக்குள் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வழியாக பரங்கிமலை வரை பறக்கும் ரயில் திட்டம் அமைக்க 1985ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கடற்கரை – மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டப் பணிகள் 266 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 1997ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. 2ஆம் கட்டமாக மயிலாப்பூர் – வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டப் பணிகள் 877 கோடியே 59 லட்சம் ரூபாயில் கடந்த 2007ல் முடிக்கப்பட்டது. இதன் பிறகு, வேளச்சேரி – பரங்கிமலை இடையே 3ஆம் கட்ட பணி 495 கோடி ரூபாயில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கியது.
இதையடுத்து இந்த ரயில் சேவையை பரங்கிமலை வரை 5 கிலோ மீட்டருக்கு நீட்டிக்கும் பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கான பணி 3 ஆண்டுகளில் 90 சதவீதம் வரை நிறைவடைந்தது. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த பெரிய முன்னேற்றமும் பல ஆண்டுகளாக ஏற்படவில்லை.
15 வருடங்களுக்கு மேலாக சென்னை மக்கள் ஒரு திட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றால் அது வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் தான். நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டது. ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையிலான 500 மீட்டர் தூர பணியில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கலால் திட்டமே நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது.
இந்நிலையில் ஆதம்பாக்கத்தில் இருந்து 500 மீட்டருக்கான பறக்கும் ரயில் திட்டப் பணியில் நிலம் கையகப்படுத்தும் பணி நீதிமன்ற உத்தரவுகளுக்கு பின்னரே முடிந்தது.கடந்த இரண்டு வருடங்களாக மீண்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பறக்கும் ரயில் திட்டம் நீட்டிப்புக்கு திட்டமதிப்பீடு ரூ.734 கோடியாக மாற்றி அமைக்கப்பட்டு ரயில்வே அதற்கு ஒப்புதலும் அளித்தது.
இதற்காக தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டு, மேம்பால இணைப்பு பணிகள் முடிந்துவிட்டன. மேலும் மீதமுள்ள பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள். ஆதம்பாக்கம்-பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே 500 மீட்டர் தூரத்தில் மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பாதை, பறக்கும் ரயில் பாதையை கடக்கிறது.
ஆகவே பறக்கும் ரயில் பாதை பணியை தெற்கு ரயில்வே மற்றும் சென்னை மெட்ரோ ரயில் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சென்னை கடற்கரை-தாம்பரம் புறநகர் மின்சார ரயில், கடற்கரை- பரங்கிமலை பறக்கும் ரயில் மற்றும் சென்ட்ரல்-பரங்கிமலை மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில், பரங்கிமலையில் புதிய ரயில் முனையம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதன்மூலம், மெட்ரோ, புறநகர் மற்றும் பறக்கும் ரயில் பயணிகள் பரங்கிமலையில் இருந்து தாங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு எளிதில் போக முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் அனைத்தும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் முடிந்ததும் தண்டவாளங்களை ஆய்வு செய்து, சேவைகளை இயக்க ஒப்புதல் அளிக்குமாறு தெற்கு கோட்டத்தின் ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் கோரிக்கை வைப்பார்கள். இதன் பின்னர் ஆய்வு முடிவடைந்ததும் ரயில் சேவை தொடங்கப்படும் என தெரிகிறது.
English summary
velachery st thomas mount mrts status in tamil : The expectation of when the Chennai Beach-Velacherry flying train service will be extended to Parangimalai has increased among the people – in this case, the Velachery-Parangimalai flying train extension work will be completed by the end of this month, officials said.