2018-ம் ஆண்டு மதுரை தோப்பூரில், 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதற்கு, 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு, எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. அதனால், மத்திய பா.ஜ.க அரசை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துவந்தன. தற்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திடீரென பூமிபூஜை நடத்தியிருப்பது, அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.
இது தொடர்பாக மதுரை எம்.பி-யான சு.வெங்கடேசன், “கடந்த வாரம்தான் பிரதமர் மோடி மதுரைக்கு வந்து சென்றார். எனவே, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை உண்மையிலேயே தொடங்குவதாக இருந்தால், பிரதமர் மோடி தலைமையில் அதை பிரமாண்டமாக செய்திருக்க முடியும். ஆனால், தமிழ்நாடு அரசுக்கோ, மாவட்ட நிர்வாகத்துக்கோ, மதுரை எம்.பி-க்கோ, அந்த இடம் அமைந்திருக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதி எம்.பி-யான மாணிக்கம் தாகூருக்கோகூட தெரியாமல், யாரையும் அழைக்காமல் ஏன் பூமிபூஜை நடத்துகிறார்கள்?