கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் 1,15,16,292 மகளிர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத் தொகையாகப் பெறுகிறார்கள். விடியல் பயணத் திட்டம் மூலம் மகளிர் 445 கோடி முறை பயணித்து, மாதம் ரூ.888 வரை சேமித்துப்பயனடைகின்றனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் ஒரு கோடி பேர் இதுவரை பயனடைந்திருக்கின்றனர். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் நாள்தோறும் 16 லட்சம் மாணவர்கள் வயிறார காலைச் சிற்றுண்டி உண்கிறார்கள். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரிலான `புதுமைப்பெண்’ திட்டத்தின் பயனாக ரூ.4,81,075 மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பட்டதாரிகளாக உருவாகப் போகிறார்கள்.
இப்படி, தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வெற்றி கண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. எங்களைச் சிலர் குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆம் இது குடும்ப ஆட்சிதான். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி இது. தற்போது, நீங்கள் நலமா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை நான் இன்று தொடங்கி வைத்தேன். இந்தத் திட்டத்தில், அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் மக்களுடன் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்துக் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும். அதேசமயம், ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையால் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி உதவிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.