`பா.ஜ.க-காங்கிரஸின் துரோகம்!’ – எடப்பாடி பழனிசாமி:
குறிப்பாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையாவிடமிருந்து இத்தகைய அறிவித்து வந்திருப்பது, தமிழக மக்களின் தலையில் இடியாக இறங்கியுள்ளது. காவிரிப் பிரச்னையாக இருந்தாலும், மேக்கேதாட்டூ அணைப் பிரச்னையாக இருந்தாலும், கர்நாடகத்தை ஆண்ட பாரதிய ஜனதா அரசும், காங்கிரஸ் அரசும் தமிழகத்திற்கு எதிராக செய்த துரோகங்களை அம்மாவின் அரசு அவ்வப்போது அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் எதிர்த்தது; தடுத்து நிறுத்தியது. காவிரி நதிநீர் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்னை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பாலைவனமாகும். மேக்கேதாட்டூவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தவறினால், தமிழகத்திற்கு துரோகத்தை செய்யத் துணியும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், கைகட்டி வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசையும் கண்டித்து, அ.தி.மு.க விவசாயிகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும்!” என எச்சரித்திருக்கிறார்.
`ஒரு சொட்டுநீர்கூட கிடைக்காது!’ – ஓ.பி.எஸ்:
“மேக்கேதாட்டூ அணை கட்டப்படாத நிலையிலேயே, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை. மாறாக, உபரி நீர் மட்டும்தான் தமிழ்நாட்டிற்கு வருகிறது. இந்த நிலையில், மேக்கேதாட்டூ அணை கட்டப்பட்டால், வருகின்ற உபரி நீரும் வந்து சேராத நிலை உருவாகும். மேக்கேதாட்டூ அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சரிடம், மேக்கேதாட்டூ அணை கட்டும் திட்டத்தினை கைவிட வலியுறுத்தவும், தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசினை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவும், இது குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசிடம் முறையிடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஓ.பி.எஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
`அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது!’ – ராமதாஸ்:
அதேபோல பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “உச்ச நீதிமன்றத் தடையை மீறி காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேக்கேதாட்டூ அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கவும், அதனடிப்படையில் மேக்கேதாட்டூ அணைக்கு அனுமதி அளிக்கவும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. ஆனால், இதை சற்றும் மதிக்காமல், மேக்கேதாட்டூ அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யும் பொறுப்பை மத்திய நீர்வள ஆணையத்திடம் காவிரி மேலாண்மை ஆணையம் அண்மையில் வழங்கியது. அதற்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து விட்டதாக கர்நாடகம் அறிவித்திருக்கிறது. இதற்குப் பிறகும் கர்நாடகத்தின் அத்துமீறல்களை தமிழக அரசும், மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.