பா.ஜ.க-வை வீழ்த்தவேண்டிய கட்டாயத்தில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள், இந்தியா கூட்டணியாக அடுத்தடுத்து வேலைகளில் ஈடுபட்டு வந்தாலும், மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள்கூட இல்லாத சூழலிலும், சீட் பகிர்வு முடிவாகாமல் கூட்டணிக்குள் பெரும் தலைவலியாக இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இன்னும் சீட் பகிர்வு முடிவுசெய்யப்படவில்லை என்றாலும், அந்தக் கூட்டணி பா.ஜ.க-வின் ஒற்றைத் தலைமையின் கீழ் இருக்கிறது. இந்தியா கூட்டணி அப்படியில்லை.
இந்தியா கூட்டணியிலிருக்கும் பெரும்பாலான கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. இதனாலேயே, காங்கிரஸுக்கு சீட் ஒதுக்குவது பிரச்னையாக இருக்கிறது. மேற்கு வங்கத்தில் `நாங்கள் தனியாகவே போட்டியிடுகிறோம், காங்கிரஸுக்கு ஒரு சீட்கூட இல்லை” என மம்தா தொடங்கிவைக்க, பஞ்சாப்பில் `நாங்கள் தனித்து களமிறங்குகிறோம், காங்கிரஸிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை’ என ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் கூறினார். ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப்பில் தங்கள் கட்சி தனித்துப் போட்டி என்பதை உறுதி செய்தார்.