‘‘அரக்கோணம் ‘சிட்டிங்’ எம்.பி ஜெகத்ரட்சகன் ஜாதகத்தின்மீதும், ஆன்மிகத்தின்மீதும் மிகுந்த நம்பிக்கைக்கொண்டவர். 1999, 2009, 2019 என ஒன்பதில் முடியும் ஆண்டுகளில்தான், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றிருக்கிறார். வரக்கூடிய தேர்தல், இரட்டை இலக்க ஆண்டில் நடைபெறவிருப்பதால், சென்டிமென்ட்டாக வேறு தொகுதிக்குத் தாவும் முடிவில் இருக்கிறார். அந்த நினைப்பில்தான் வருடப் பிறப்புக்குப் பிறகு தொகுதிப் பக்கம் வருவதையே குறைத்துக்கொண்டார்” என்கின்றன தி.மு.க வட்டாரங்கள். இந்த நிலையில், ஜெகத்ரட்சகன் மீதும் மக்களிடம் அதிருப்தி காணப்படுவதால், வரக்கூடிய தேர்தலில், அரக்கோணம் தொகுதிமீது கூடுதல் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறது தி.மு.க தலைமை.
ஜாதக நம்பிக்கையின்படி ஜெகத் வேறொரு தொகுதிக்கு மாறும் பட்சத்தில், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க பொருளாளர் ஏ.வி.சாரதிக்கு ‘சீட்’ கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மிகுந்த நம்பிக்கையில் ஏ.வி.சாரதியும் சீட் பெற மும்முரமாகியிருக்கிறார். அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தியும் சீட் எதிர்பார்க்கிறார். மூத்த நிர்வாகிகளை மரியாதைக் குறைவாக நடத்துவதாக வினோத் காந்தி மீது அதிருப்தி அலையும் அடிக்கிறது.