எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினியின் பாணியைத்தான் விஜய் திரையில் பின்பற்றினார். அரசியலென வரும்போது எம்.ஜி.ஆர் அதில் பெரிய வெற்றியை பெற்றார். ஆனால், ரஜினி அப்படியில்லை. விஜய் என்னவாகப் போகிறார்?
ரஜினியையும் விஜய்யையும் ஒப்பிடவே முடியாது. விஜய் மக்களுக்காக கட்சி ஆரம்பிக்கிறேன் என அதற்கான வேலைகளில் இறங்கி தீவிரமாக செயல்பட தொடங்கிவிட்டார். 70 களில் எம்.ஜி.ஆர் எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்போது விஜய் இருக்கிறார். 90 களில் ரஜினியும் அப்படித்தான் இருந்தார். அந்த வாய்ப்பை அவர் தவறவிட்டுவிட்டார். 1977 இல் எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றியை பெற்றதைப் போலவே விஜய் வருகின்ற தேர்தலில் பெரும் மக்கள் சக்தியோடு வெற்றி பெறுவார்.
நடிகர்கள் அரசியலுக்கு வந்ததன் சமீபத்திய உதாரணம் கமல்ஹாசன். தனியாக வந்து மாற்றத்தை தருகிறேன் என சொன்னவர் இப்போது கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இருக்கிறார். இதை கவனித்தீர்களா?
இந்தியாவில் எக்கச்சக்கமான நடிகர்கள் இருக்கிறார்கள். எல்லாருமே பலத்த மக்கள் செல்வாக்கைப் பெற்றவர்கள் அல்ல. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினி இப்போது விஜய். இவர்களுக்குதான் முழுமையான மக்கள் செல்வாக்கு இருக்கிறது. இப்படியான நபர்கள்தான் பெரிய விளைவுகளை ஏற்படுத்துவார்கள். எம்.ஜி.ஆரின் முகத்திற்கென பெரும் மதிப்பு இருந்தது. ஆனால், அவர் அதை மட்டும் வைத்து வெல்லவில்லை. கட்சியில் நீண்ட நாட்களாகப் பயணித்திருந்தார். அவருக்கென கொள்கைப்பிடிப்பு இருந்தது. அதனால்தான் வென்றார். விஜய்யும் அம்பேத்கர், பெரியார், காமராஜரின் கொள்கை வழிநின்று தாக்கம் ஏற்படுத்துவார். “தீயசக்தி திமுக’ என எம்.ஜி.ஆர் செய்த பிரசாரத்தைப் போல ஊழலுக்கும் மதவாதத்திற்கும் எதிராக விஜய் பிரசாரம் செய்து ஆட்சியைப் பிடிப்பார்.