நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவரும் சூழலில், மக்களவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, பட்டியலின அமைச்சரை விமர்சித்ததாக மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்ட சம்பவம் விவாததுக்குள்ளளாகியிருக்கிறது. முன்னதாக, மக்களவையில் இன்று காலை கூட்டம் தொடங்கியதும், கடந்த டிசம்பரில் சென்னை, தூத்துக்குடியில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியிருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய தி.மு.க எம்.பி ஆ.ராசா, “மத்திய அரசு எப்போது நிதி ஒதுக்கியது… அப்படி ஒதுக்கப்பட்டிருந்தால் அந்த நிதி, குஜராத் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அளவுக்கு இருக்கிறதா…” எனக் கேட்டார்.
அதற்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், கேள்விக்கு பதிலளித்தார். அவரைத்தொடர்ந்து, வெள்ள பாதிப்பு குறித்து தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, “இது முற்றிலும் வானிலை ஆய்வு மையத்தின் தோல்வி…” என உரையாற்றிக் கொண்டிருந்தார். தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டார். அப்போது, குறுக்கீடு செய்வதை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் முறையிட்ட டி.ஆர்.பாலு அவரை நோக்கி, “மரியாதை என்பதே தெரியவில்லை. எம்.பி-யாகவும், அமைச்சராகவும் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியில்லை (UNFIT) உங்களுக்கு” என்று கூறினார்.