கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சி.பி.எம்
“அற்பத்தனமான கருத்தைச் சொல்லியிருக்கிறார் ஆளுநர். வள்ளுவர், வள்ளலார், மகாத்மா காந்தி என வரிசையாக வன்மத்தைக் கொட்டியவர். இப்போது வெண்மணி தியாகிகளைக் குறிவைத்திருக்கிறார். உண்மையில், தான் சார்ந்த தத்துவார்த்தப்படி, ஆளுநர் சென்றிருக்கவேண்டிய இடம் தியாகிகள் நினைவிடம் அல்ல. 44 பேரை உயிருடன் கொளுத்திய கோபாலகிருஷ்ண நாயுடுவின் சமாதிக்குத்தான். வெண்மணி சம்பவத்துக்கும் தி.மு.க-வுக்கும் என்ன தொடர்பு… அது தொழிலாளர்களுக்கும் நிலப்பிரபுவுக்கும் இடையே நடந்த போராட்டம். வரலாறு தெரியாமல் அரைகுறையாக எதையாவது உளறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் ஆர்.என்.ரவி. உழைப்பாளிகளின் உரிமைக்குப் போராடி உயிர்நீத்தவர்களுக்காகப் பொதுமக்களிடம் நிதி திரட்டிக் கட்டப்பட்ட நினைவிடத்தைக் கீழ்மை செய்திருக்கிறார் ஆளுநர். தியாகிகள் வசிக்கும் குடிசைகளைப் பற்றிப் பேசுபவர், வெளிநாட்டு விருந்தினர் வரும்போது பச்சைத்துணி போட்டு ஏழைகளின் குடிசைகளை மூடுபவர்களையும், புல்டோசரால் பொதுமக்களின் வீடுகளை இடிப்பவர்களையும் பற்றிப் பேசுவாரா… பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதி 25 சதவிகிதம்தான். 75 சதவிகித நிதியை வழங்குவது மாநில அரசுதான். ஆனால், ‘பிரதமர்’ பெயரில் அந்தத் திட்டத்துக்குப் பெயரிட்டு மக்களை ஏமாற்றுவது குறித்து வாய் திறப்பாரா ரவி… ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடிமட்டத் தொண்டனாக இருக்கும் ஆளுநர், கம்யூனிஸ்ட்டுகளின் தியாக வரலாறு குறித்துப் பேச அருகதையற்றவர்.’’
Breaking News, 24/7