தமிழ்நாடு அரசு விற்பனைக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதையொட்டிய பார்களில் இரவு 10 மணி தொடங்கி பிற்பகல் 12 மணி வரை சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாகவும் பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்திய இருவர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவின் தரம் குறித்து பெரும் சந்தேகங்கள் ஏற்பட்டன. இதனால், டாஸ்மாக் கடைகளையொட்டிய பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், அவற்றைக் கண்காணிக்கவும் தமிழக காவல்துறையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த சிலர், ஈரோடு பேருந்து நிலையம் அருகேயுள்ள 3480 எண் கொண்ட டாஸ்மாக் கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விலை உயர்ந்த மது வகையை வாங்கி உள்ளனர். இந்த பாட்டிலின் பெட்டியைத் திறந்தபோது, மூடி சரியாக மூடாமல் திறந்த நிலையில் இருந்துள்ளது. அதை முகர்ந்து பார்த்தபோது, விலை குறைந்த மதுவைப் போன்று வாசனை அடித்துள்ளது.