கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் மாநில முதல்வர் பினராயி விஜயனுக்குமான மோதல் நீண்டகாலமாக நீடித்துவருகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதாகவும், பல்கலைகழகங்களில் நியமனங்கள் சம்பந்தமாகவும் கவர்னருக்கு எதிராக ஆளும் சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ மற்றும் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ ஆகியவை போராட்டம் நடத்திவருகின்றன.
எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் கறுப்புகொடி போராட்டம் நடத்தி, தனது காரில் தட்டியதாக கடந்த மாதம் கவர்னர் காரில் இருந்து இறங்கி திட்டிய சம்பவம் நடந்தது. மேலும் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சிக்குச் சென்ற கவர்னர் பாரம்பர்யம் மிக்க மிட்டாய் தெருவில் இறங்கி நடந்து பரபரப்பை கிளப்பினார். மேலும், நேற்று முன்தினம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையில் கடைசி பத்தியை மட்டும் வாசித்துவிட்டு பாதியில் சென்றார் கவர்னர் ஆரிப் முகமதுகான்.
இந்த நிலையில் இன்று கொட்டாரக்கரை சதானந்தா ஆசிரமத்தில் நிகழ்ச்சிக்காக திருவனந்தபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றாத் கவர்னர் ஆரிப் முகம்மதுகான். கொல்லம் நிலமேல் பகுதியில் கார் கவர்னரின் கார் சென்றுகொண்டிருந்தபோது எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் வழக்கம் போல் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய கவர்னர் ஆரிப் முகம்மதுகான் தனக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை எனக்கூறி சாலை ஓரத்தில் சேரில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
இன்று காலை சுமார் 10.45 மணியளவில் சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கிய கவர்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செயலாளரை போனில் அழைத்து புகார் தெரிவித்ததுடன், பிரதமரையும் தொடர்புகொண்டுபேச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீஸார் சட்டத்தை மீறி செயல்படுவதாக கோபப்பட்டார் கவர்னர். சுமார் 60 பேர் கவர்னருக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியதாக கூறப்படும் நிலையில் சுமார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் 12 பேரை கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும், வீடியோ காட்சிகளை பார்த்து போராட்டம் நடத்திய அனைவரையும் கைது செய்ய டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், டி.ஜி.பி போனில் கவர்னரை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், கவர்னர் அதற்கு செவிசாய்க்கவில்லை. மேலும், போராடியவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறியும் கவர்னர் போராட்டத்தை முடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து சடயமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்ததற்கான எஃப்.ஐ.ஆர் நகலை காண்பித்த பிறகுதான் போராட்டத்தை நிறைவுசெய்தார் கவர்னர் ஆரிப் முகம்மதுகான்.
இதுகுறித்து கவர்னர் ஆரிப் முகம்மதுகான் கூறுகையில், “முதல்வரிடம் இருந்து தினக்கூலி வாங்குபவர்கள் எனக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். எஸ்.எஃப்.ஐ-யினர் என் காரில் இடித்ததால்தான் காரிலிருந்து வெளியே இறங்கினேன். முதல்வர் பயணிக்கும்போது இப்படித்தான் பாதுகாப்பு கொடுப்பார்களா.
முதல்வர் போகும்போது போராட்டக்காரர்கள் இங்கு நிற்க முடியுமா. அவரின் காரில் இடிக்க சம்மதிப்பார்களா. போலீஸார் விதியை மீறி செயல்படுகின்றனர். போலீஸை குறைச்சொல்லவில்லை, அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வருகிறது. பல வழக்குகளில் சிக்கியவர்கள்தான் எனக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். அந்த அமைப்பின் தலைவர் மீதும் வழக்கு உள்ளது. நான் வரும் முன்பு அவர்களை ஏன் அப்புறப்படுத்தியிருக்கக்கூடாது. அவர்களை அப்புறப்படுத்த முடியாது. முதல்வர் வலியுறுத்தலால் அவர்கள் வந்து நிற்கிறார்கள்”என்றார்.
கவர்னர் சாலை ஓரம் அமர்ந்து சுமார் 2 மணி நேரம் போராடினார். இதனால் சாலையோரத்தில் இருந்த கடையில் வியாபாரம் பாதித்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் போராட்டம் முடிந்து புறப்பட்டபோது கவர்னர் தரப்பில் இருந்து கடைகாரருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY