உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று எழுந்த கோஷத்தால் 1992-ம் ஆண்டு கலவரத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அதன்பின்னர் அங்கு ராமர் கோயில் கட்டலாம் என 2019-ல் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. தற்போது, அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கும் தயாராகிவிட்டது. மேலும், இதே உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி, மதுராவிலிருக்கும் மசூதிகளும் இந்தக் கடவுள்களின் இடத்தில் கட்டப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கர்நாடக முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் மசூதிகளிலிருந்து முஸ்லிம்கள் அவர்களாக வெளியேறாவிட்டால் எத்தனை பேர் கொல்லப்படுவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது எனப் பேசி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.
பெலகாவியில் நேற்று நடந்த இந்து ஊழியர் மாநாட்டில் பேசிய பா.ஜ.க தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, “மதுரா உட்பட மேலும் இரண்டு இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. நீதிமன்ற தீர்ப்பு வந்ததும், இன்றைக்கோ, நாளைக்கோ கோயில்கள் கட்டும் பணியில் நாங்கள் ஈடுபடுவோம். அதில், எந்த சந்தேகமும் வேண்டாம். இதுபோன்று மசூதிகள் கட்டப்பட்ட பகுதிகளிலிருக்கும் முஸ்லிம்கள் தானாக வெளியேறினால் நல்லது. அப்படியில்லையென்றால், எத்தனை பேர் கொல்லப்படுவார்கள், என்ன நடக்கும் என்பது உள்ளிட்ட விளைவுகள் எதுவும் எங்களுக்குத் தெரியாது” என்று கூறினார்.
கே.எஸ்.ஈஸ்வரப்பா இவ்வாறு முஸ்லிம்களை அச்சுறுத்துவது இதுவொன்றும் முதல்முறையல்ல. இதற்கு முன்னர் ஒருமுறை செய்தியாளர்களிடம், “எங்கள் கோயில்களை அழித்துக் கட்டப்பட்ட மசூதிகள் விட்டுவைக்கப்படாது. அத்தகைய ஒரு மசூதி கூட இந்த நாட்டில் நிலைக்காது. இது எனது தனிப்பட்ட கருத்து” என்று கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியிருந்தார். மேலும், கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போதுகூட, பா.ஜ.க வெற்றிபெற முஸ்லிம்கள் வாக்குகள் தேவையில்லை எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.