அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை, 5 நாள்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த நிலையில், காவலுக்காக விண்ணப்பித்து அமலாக்கத்துறையினர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை இன்று மாலை அணுகினர். அப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலையும் அவர்கள் சமர்ப்பித்தனர். இதையடுத்து மாலை 5 மணியளவில் விசாரணை தொடங்கியது.
புழல் சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தாடியுடன் தோற்றமளித்தார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகலைப் பார்த்த பின்பு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, “செந்தில் பாலாஜி, உங்களை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, இன்று முதல் 12-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தருகிறோம்” என்றார். அதற்கு செந்தில் பாலாஜி, “பைபாஸ் அறுவை சிகிச்சை காரணமாக என் காலில் இருந்த நரம்பை எடுத்துவிட்டனர். அதனால் காலை அசைக்கக்கூட முடியாத நிலையில் நான் இருக்கிறேன். என் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விசாரணையைத் தள்ளி வைக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அல்லி, “உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்திருப்பதால், நான் தனியாக ஏதும் தீர்ப்பளிக்க இயலாது. மேலும் உச்ச நீதிமன்றத்திலேயே உங்கள் தரப்பு உங்கள் உடல்நிலை குறித்து விளக்கியிருக்கிறது. அதற்கு உச்ச நீதிமன்றம், `அதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. எனவே உங்களுக்கு உடல்ரீதியாக ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்” என்று கூறி, அவருக்கு ஐந்து நாள்கள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிட்டார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs