மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். உங்கள் அன்பை பிரதமருக்கு கொண்டு சொல்வது எங்கள் பொறுப்பு, நீங்கள் விரும்பியதுபோல நடக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். ஆனால், அது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள்தான் எங்கள் பாதயாத்திரைக்கு வலுசேர்க்க வேண்டும். அதைப்பார்த்து மோடி இங்கே போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மோடியை எதிர்த்து 17 பேர் சேர்ந்து ஒன்றாக கூட்டம் நடத்துகின்றனர். அந்த கூட்டத்துக்கு `இந்தியா’ என பெயர் வைத்துள்ளனர். இந்தியா என்று சொல்வதற்கு தகுதி வேண்டும். அந்த கூட்டணியில் உள்ள நபர்கள் தமிழகத்தை தனி தமிழ்நாடாக பிரிக்க வேண்டும், காஷ்மீரை தனி நாடு என்று பேசுபவர்கள். அங்கிருக்கும் அனைவரும் ஊழல்வாதிகள். புலிக்குட்டியை பார்த்து பூனைக்குட்டி சூடுபோட்டு கொண்டதை போல, இந்தியாவை நேசிக்காதவர்கள் `இந்தியா’ என்று பெயரை வைத்து கொண்டு சுற்றுகிறார்கள். எங்களுக்கு எந்நாளும் நரேந்திர மோடிதான் பிரதமர். ஆனால் அவர்கள் கூட்டணியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரதமர். அவர்களின் கனவு பலிக்காது. தமிழகம் முழுவதும் தேசியத்தை கொண்டு செல்வதுதான் இந்த யாத்திரையின் நோக்கம்.
இந்த மண்ணையும் மக்களையும் யாரும் சூறையாடக் கூடாது என்பதற்காகத்தான் 234 தொகுதிகளிலும் யாத்திரை பயணம் செல்கிறோம். மீண்டும் திராவிடர் கயவர் கூட்டம் நம்மை அண்டிப் பிழைத்து, நம்மிடம் உள்ள சொத்துகளை எல்லாம் பிடுங்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டுள்ளோம். அவர்களை அப்புறப்படுத்த 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் ஒரு வாய்ப்பாக வருகிறது. இந்த முறை 39 தொகுதிகளிலும், குறிப்பாக ராமநாதபுரம் தொகுதியில் முதல் தொகுதியாக அனுப்பி வைக்க வேண்டியது நம்கடமையாக கொள்ள வேண்டும். ஒரு தராசு தட்டில் சமமாக வைத்து மோடியை பார்க்கும் அளவிற்கு எந்த அரசியல்வாதிக்கும் தகுதி கிடையாது. மோடி என்பவர் அரசியல்வாதி கிடையாது. மக்களுக்காக சேவை செய்யும் சேவகர்” என்றார்.