Trichirappalli
oi-Velmurugan P
திருச்சி: திருச்சி கருமண்டபம் பகுதியில் மசாஜ் சென்டரில் (ஸ்பா) விபச்சார தொழில் செய்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்தில்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி கருமண்டபம் பகுதியில் மசாஜ் சென்டரில் (ஸ்பா) பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை அடுத்து திருச்சி விபச்சார தடுப்புப் பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு கடந்த 10 நாட்கள் முன்பு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
அந்த வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் லட்சுமி தேவி என்பவர் மேலாளராக இருந்து விபச்சாரம் செய்துவந்தது தெரியவந்தது. அவரது ஏற்பாட்டில் அங்கு இரண்டு பெண்களும் இருந்தனர். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்தபோது இந்த ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடைபெறுவது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த இரண்டு பெண்களும் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஸ்பா மேலாளர் லட்சுமி தேவியைக் கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட லட்சுமி தேவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக உள்ள செந்தில்குமார் என்பவர் தான் இந்த ஸ்பாவின் உரிமையாளர் என கூறினார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்,
இதனிடையே மாணவர்களுக்கு உதவி தொகை மற்றும் பரிசு உள்பட பல நல்ல விஷயங்களை நடிகர் விஜய் செய்து வரும் நிலையில், அவரது இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகி இப்படி ஒரு தொழில் செய்தது, விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தலைமறைவாக இருந்த திருச்சி ‘ஷைன் ஸ்பா’ உரிமையாளரான செந்தில்குமார் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தனது ஸ்பாவில் சோதனை நடத்திய போதே தலைமறைவாகிவிட்டதால், அவரை பிடிக்க தீவிரமாக போலீசார் முயற்சித்து வந்தனர்.
இந்நிலையில் தீவிரமாக தேடிவந்த விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்தில்குமாரை கைது செய்தனர். அவரது விடுதியில் 3 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். செந்தில்குமாரை போலீசாரிடம் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்கள். அதில் பல தகவல்கள் வெளியாகும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.
English summary
Vijay Makkal iyakkam Executive Senthilkumar, who was absconding in the case of running a prostitution business in a massage center (spa) in Trichy’s Karumandapam area, was arrested by the special force police.