Chennai
oi-Jeyalakshmi C
சென்னை: அதிமுக ஆட்சியில் கடன் வாங்குவதாக குறைசொன்ன திமுக இதுவரை ரூ.2.20 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறினார். கடன் வாங்கும் இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு திவாலாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அரசின் கடன் 3.55 லட்சம் கோடி ரூபாயில் இருந்து,3.97 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்காக வரும் நிதியாண்டில் வட்டி மட்டும் ரூ. 33.226 கட்ட வேண்டிய சூழல் ஏற்படும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20ஆண்டில் தமிழக அரசு ரூ.43,000 கோடி கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். கடந்த ஆண்டை விட தமிழக அரசின் கடன் இந்த ஆண்டு 42 ஆயிரம் கோடி அதிகம் என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழக அரசின் கடன் சுமை ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. 10 ஆண்டுகால ஆட்சியில் அதாவது 2021ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக அதிகரித்தது. அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக கடன் சுமையை கடுமையாக விமர்சனம் செய்தது. பிறக்கும் குழந்தையின் தலையில் ரூ.62 ஆயிரம் கடன் சுமை, ஆட்சியாளர்கள் நிதி மேலாண்மையில் ஏற்படுத்தியுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார் திமுக தலைவராக இருந்த ஸ்டாலின்.
வரலாறு காணாத கடன் சுமையில் தமிழகம் தத்தளிக்கிறது. இதிலிருந்து தமிழகத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம்’ என்பது 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க வாக்குறுதி அளித்தது. தமிழ்நாட்டில் இலவச திட்டங்கள் அதிகம் உள்ளன. அந்த இலவச திட்டங்களை செயல்படுத்த கடன் வாங்க வேண்டியுள்ளதாக அப்போதய அதிமுக அரசு கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்த திமுகவும் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, நேற்று நடந்தது விவசாயிகள் சார்ந்த போராட்டம். காவல்துறையை ஏவி விட்டு அறவழி போராட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள். என்எல்சிக்கு எதிராக போராடிய எங்கள் தொண்டர்கள் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் கூறினார்.
விவசாயிகள் விரோத போக்கை அரசு கைவிட வேண்டும். அறுவடைக்கு தயாரான பயிர்களை அழிப்பது நியாயமா? அவ்வாறு மனசாட்சி இல்லாமல் இருக்கும் என்எல்சிக்கு திமுக அரசு, அமைச்சர்கள், ஆட்சியர்கள், அதிகாரிகள் ஆதரவாக உள்ளனர். என்எல்சி நிலம் கையகப்படுத்துவதை முதல் அமைச்சர் ரத்து செய்ய வேண்டும். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அன்புமணி கூறினார்.
கிருஷ்ணகிரி வெடி விபத்தில் பலியான உயிர்கள்.. மன வேதனை.. பிரதமர் மோடி இரங்கல்
தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், அதிமுக ஆட்சியில் கடன் வாங்குவதாக குறைசொன்ன திமுக இதுவரை ரூ.2.20 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. கடன் வாங்கும் இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு திவாலாகிவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
English summary
Anbumani Ramadoss said that the DMK has taken a loan of Rs 2.20 lakh crore so far, complaining about taking loans from the AIADMK government. Anbumani Ramadoss has also warned that Tamil Nadu will become bankrupt if the same situation of borrowing continues.
Story first published: Saturday, July 29, 2023, 18:13 [IST]