Washington
oi-Vigneshkumar
வாஷிங்டன்: அமெரிக்காவில் இப்போது அதிபர் தேர்தல் நடைபெற்றால் யார் வெல்வார்கள் என்பது குறித்த கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், இது டிரம்ப் ஆதரவாளர்களைக் குஷியாக்கியுள்ளது.
அமெரிக்க அதிபராக இப்போது ஜோ பைடன் இருக்கிறார். கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அப்போது அதிபராக இருந்த குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரைம்பை வீழ்த்தி ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பைடன் அதிபராகத் தேர்வானார்.
அப்போது அங்கே நடந்த மோசமான சம்பவங்கள் அமெரிக்க ஜனநாயகத்தில் கருப்பு நாளாகக் கருதப்படுகிறது. அதாவது தனது தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்த டிரம்ப், தனக்கு எதிராக மிகப் பெரிய சதி நடந்ததாக ஆதாரமே இல்லாமல் பொய்யான தகவல்களைக் கூறி வந்தார்.
டிரம்ப்: 2021 ஜனவரி மாதம் அதிபராக பைடனை அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யும் நிகழ்வு நடக்கும் போது, டிரம்ப் தூண்டுதலால் அமெரிக்க நாடாளுமன்றத்தின் உள்ளே புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் அங்கே மிகப் பெரிய கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டது. அப்போது அங்கு நிலைமையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர ராணுவத்தைக் கூட களமிறக்க வேண்டியிருந்தது.
இப்படி தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அதிபர் பதவியை விட்டுத் தரவே அடம்பிடித்தவர் டிரம்ப். அமெரிக்க வரலாற்றில் மிகவும் சர்சசைக்குரிய அதிபர்களில் ஒருவராக டிரம்ப் அறியப்படுகிறார். டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலகி சில ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னுமே அதிபராக இருந்த போது அவரது செயல்பாடுகள் குறித்த சர்ச்சை கிளம்பியே வருகிறது. இந்தச் சூழலில் தான் அங்கு அடுத்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்க உள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
மீண்டும் மீண்டுமா: இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தல் இப்போது நடந்தால் யார் வெல்வார்கள் என்பது குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. ஹார்வர்ட்-ஹாரிஸ் என்ற அமைப்பு நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பில் பைடனும் டிரம்பும் தேர்தலை எதிர்கொண்டால் டிரம்ப் 5% வாக்குகளை அதிகம் பெற்று வெல்வார் என்று கூறப்பட்டுள்ளது. போட்டி கமலா ஹாரீஸ் vs டிரம்ப் என மாறினாலும் கூட டிரம்ப் தான் வெல்வாராம். அதுவும் கமலா ஹாரீஸை காட்டிலும் 7% கூடுதல் வாக்குகளைப் பெறுவார் என கூறப்பட்டுள்ளது.
இந்த சர்வே-இல் பெரும்பாலானோர் பைடன் அதிபராக பணியாற்ற மனரீதியாகத் தகுதியற்று இருப்பதாகக் கூறியுள்ளனர். 59% பேர் அவர் அதிபர் பதவியில் இருக்கப் பிட்டான நபர் இல்லை என கருதுகின்றனர். 68% பேர் பைடனுக்கு அதிக வயதாகிவிட்டதாகக் குறிப்பிடுகிறார்கள்.
பைடனுக்கு பெரிய சிக்கல்: அமெரிக்காவின் 46ஆவது அதிபராகத் தேர்வாகியுள்ள பைடனுக்கு இப்போது 80 வயதாகிறது. அவர் அதிபராகப் பதவியேற்ற நாள் முதலே அவரது வயது குறித்தும் இதனால் அவரால் அதிபராகத் திறம்படச் செயல்பட முடியாது என்ற விமர்சனம் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப அவரும் பல நேரங்களில் பொது நிகழ்ச்சியில் தடுக்கி விழுவது, மாற்றி மாற்றிப் பேசுவது எனச் சம்பவங்களில் சிக்கியுள்ளார். இவை நமக்குச் சின்ன விஷயம் போலத் தோன்றினாலும், அமெரிக்க மக்கள் இதை எல்லாம் அதிகமாகவே கவனிப்பார்கள்.
மேலும், டிரம்புடன் இணைந்து குடியரசு கட்சி சார்பில் பல தலைவர்கள் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினாலும் கூட பெரும்பாலானோரின் ஆதரவு டிரம்பிற்கே இருப்பதாகவும் இந்த சர்வே முடிவில் கூறப்பட்டுள்ளது. சமீப காலங்களாக வரும் அனைத்து சர்வேக்களிலும் பைடனை டிரம்ப் வெல்வார் என்றே முடிவு வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. அதாவது அமெரிக்காவில் இப்போது இரட்டை கட்சி முறை தான் இருக்கிறது. பல ஆண்டுகளாகக் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிபர்களாக இருந்து வருகிறார்கள். பெரும்பாலான மக்கள் இரட்டை கட்சி முறையில் அதிருப்தி அடைந்துள்ளனர். சுமார் 70% பேர் புதிய கட்சி எதாவது வந்தால் ஆதரவு தரத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
“ஒரு பெரிய மனுஷன் செய்யற காரியமா இது..” ஹோட்டலில் டிரம்ப் செய்த சம்பவம்.. செம கடுப்பான மக்கள்
English summary
Trump will have a huge victory if US Presidential election held today: Most of the americans are says Biden is mentally unfit to be President.