இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமரே… நீங்கள் வடகிழக்கில், இந்தியாவின் Act East policy-யைப் பார்க்கவில்லை, ஆனால் கிழக்கு இந்திய நிறுவனத்தைப் கவனிக்கிறீர்கள்! இந்த இந்தியா பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைத் தோற்கடித்தது. இந்தியன் முஜாஹிதீனை இந்தியா தோற்கடித்தது. எனவே, தற்போதைய முக்கியப் பிரச்னையான மணிப்பூரில் நடக்கும் கொடூர வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் எப்போது அறிக்கை அளிப்பீர்கள்… மணிப்பூர் மக்களின் காயங்கள் சரி செய்யப்பட்டு அங்கு அமைதி எப்போது திரும்பும்… இப்போது பிரதமரே திசைத் தெரியாதவராகிவிட்டார். எதிர்க்கட்சிகள்தான் நாட்டிற்கு வழிகாட்டி வருகின்றன” எனத் தெரிவித்தார்.
அதேபோல, முன்னாள் எம்.பி-யும், காங்கிரஸின் முக்கியத் தலைவருமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “மிஸ்டர் மோடி, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எங்களைச் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனாலும் நாங்கள் இந்தியாதான் (INDIA). அதனால், நாங்கள், மணிப்பூரை குணப்படுத்தவும், அங்கு கண்ணீர் சிந்தும் ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தையின் கண்ணீரைத் துடைக்கவும் உதவுவோம். மக்களிடம் அன்பையும் அமைதியையும் திரும்பக் கொண்டு வருவோம். மணிப்பூரில் இந்தியா (INDIA) என்ற எண்ணத்தை மீண்டும் உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.