Chennai
oi-Nantha Kumar R
சென்னை: சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி ராஜா திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3ம் தேதி குக்கி-மைத்தேயி இன மக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறிய தொடர்ந்து வருகிறது. இரண்டரை மாதங்கள் கடந்தும் கூட இந்த வன்முறை தொடர்ந்து வருகிறது.
மணிப்பூரை பொறுத்தமட்டில் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். இதற்கிடையே தான் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மைத்தேயி மக்கள் கூறி வருகின்றனர். இதற்கு குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஏற்பட்ட மோதல் தான் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
மணிப்பூர் வன்முறையின் ஒருபகுதியா கடந்த மே மாதம் 4ம் தேதி ஒரு கும்பல் 2 குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கிடையே தான் மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக அம்மாநில பாஜக அரசு மற்றும் மத்திய பாஜக அரசை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்தும், நீதி கேட்டும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்பட பல கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளன. இந்நிலையில் தான் இன்று சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மணிப்பூர் வன்முறைக்கு நீதி கேட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா பங்கேற்றார். அப்போது அவர் மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய பாஜக அரசை குற்றம்சாட்டி பேசினார். ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு டி ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது திடீரென்று அவர் மயங்கி கீழே விழுந்தார்.
இதையடுத்து கட்சியினர் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே டி ராஜா மயங்கி விழுந்த நிலையில் அவரை மீட்டு கட்சியினர் காரில் ஏற்றும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
English summary
CPI General Secretary D Raja suddenly fainted during the protest in Chennai and he is being treated at the Chennai Government Stanley Hospital.