“மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு உண்மையாகவே கோபம்தானா?” – கார்கே
மணிப்பூர் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “ நாடாளுமன்றத்துக்கு வெளியேதான் மணிப்பூர் குறித்து பேசினீர்கள். 80 நாள்களாக நடந்துவரும் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விளக்கமளிக்க வேண்டும். மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடிக்கு உண்மையாகவே கோபம் இருக்கிறது என்றால் அவர் மணிப்பூர் முதல்வரை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்” என்றார்.
செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைதுசெய்தது. இது தொடர்பாக அவரின் மனைவி தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடிசெய்து, செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் மனைவியின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
கர்நாடக அரசு இதுவரை காவிரியிலிருந்து 3 டி.எம்.சி தண்ணீர்தான் தந்திருக்கிறது!
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கர்நாடக அரசு இதுவரை காவிரியிலிருந்து 3 டி.எம்.சி தண்ணீர்தான் தந்திருக்கிறது. அதனால் நான் நேரடியாக டெல்லி சென்று காவிரி நீர் மேலாண்மைக் குழுவிடம் தண்ணீர் விவகாரம் குறித்துப் பேசி தண்ணீரைத் திறந்துவிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். காவிரியில் நீர் குறைவாக இருக்கிறதென்றால் அதை இரு மாநிலங்களும் எப்படிப் பங்கிட்டுக்கொள்வது என்பதை காவிரி நீர் மேலாண்மை வாரியம்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், அது மெத்தனமாக இருக்கிறது. அதனால்தான் நான் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டின் நிலையை விளக்கினேன். அப்போதும் எந்தப் பலனுமில்லை” என்றார்.
மணிப்பூர் கலவரம்; குற்றவாளியின் வீட்டைக் கொளுத்திய பெண்கள்!
மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை நான்கு குற்றவாளிகளை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். இந்த நிலையில், பழங்குடிப் பெண்களை நிர்வாணப்படுத்தி, வன்கொடுமை செய்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளியின் வீட்டை உள்ளூரைச் சேர்ந்த பெண்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர்.
ராகுல் காந்தி வழக்கு – உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க புர்னேஷ் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இது தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைக்க கோரிய மேல்முறையீடு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
மாநிலங்களவை மதியம் 2:30 வரை ஒத்திவைப்பு
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்ட விவகாரம் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்திருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பாக குரலெழுப்பி வருகின்றன. இந்த நிலையில், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநிலங்களவை மதியம் 2:30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.