Weather
oi-Vigneshkumar
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், அடுத்து ஒரு வாரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் முதல் இரண்டு வாரங்கள் வரை வெப்பம் வைத்துச் செய்தது. அதன் பின்னர் சட்டென வானிலை மாறிய நிலையில், நல்ல மழை பெய்தது. இந்த மழை மக்களுக்குச் சற்றே நிம்மதியைக் கொடுத்தது.
இப்போது வெப்பம் குறைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
எங்கே மழை: தமிழ்நாட்டில் இன்று தொடங்கி அடுத்து 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 18) மற்றும் நாளை (ஜூலை 19) நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
வரும் ஜூலை 20 முதல் ஜூலை 24 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரைத் தேவாலா (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்), வொர்த் எஸ்டேட் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பார்வூட் ( நீலகிரி) ஆகிய இடங்களில் தலா 20 மிமீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் நாளை முதல் ஜூலை 20 வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் நாளை 19.07.2023 முதல் 22.07.2023 வரை: வடக்கு கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English summary
Several places in tamilnadu will get rain in upcoming days: Tamilnady weather alert for upcoming days.
Story first published: Tuesday, July 18, 2023, 16:00 [IST]