கலைஞர் நூலகத் திறப்பு விழா; `இதனால்தான் ஷிவ் நாடாரை அழைத்து வந்தேன்..!' – காரணம் விளக்கிய ஸ்டாலின்

Img 20230716 Wa0007.jpg

“நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்லும் திராவிட மாடல் கோட்பாடு இதுதான். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்” என்று பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மதுரையில் ரூ.215 கோடி செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் ஷிவ் நாடார், ரோஷினி நாடார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஷிவ் நாடாருடன் முதலமைச்சர்

நூலகத்தை திறந்து வைத்துவிட்டு அருகில் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என நான் அடிக்கடி சொல்வது, கல்வியும் சுகாதாரமும்தான். அதனால்தான், கலைஞர் நூற்றாண்டு தொடக்கமான கடந்த ஜூன் 15-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை சென்னை சைதாப்பேட்டை, கிண்டியில் திறந்து வைத்தேன். ஒரு மாதம் கழித்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்திருக்கிறேன். அந்த பெருமிதத்தோடு இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின். இவை இரண்டும் தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றால் தமிழ்நாட்டினுடைய கலைநகர் மதுரை. தலைநகரில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் தந்தவர் அவர் தம்பி கலைஞர். இந்தக் கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனும் தென் தமிழ்நாட்டின் அறிவாலயத்தை இந்த அடியேன் அமைத்திருக்கிறேன்.

நூலக விழாவில்

சங்ககால இலக்கியங்களை சாமானியருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நூலகத்தை இங்கு வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும்… சிலப்பதிகாரம் குறித்தும் நீதி கேட்ட கண்ணகி குறித்தும் கலைஞர் தீட்டாத எழுத்து ஓவியங்கள் இல்லை. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என அறச்சீற்றம் கொண்டு கண்ணகி எரித்த இந்த நகரத்தில் லட்சக்கணக்கான நூல்கள் கொண்ட இந்த நூலகத்தினால் அறிவுத் தீ பரவ போகிறது. திராவிட இயக்கம் என்றாலே அறிவியக்கம்தான்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அதற்கு அறிவகம் என்று பெயர் வைத்தார். சென்னையில் புதிதாக தலைமைக் கழகத்தை அமைத்த கலைஞர் அண்ணா அறிவாலயம் என்று பெயர் வைத்தார்கள். ஏனென்றால், இது அரசியல் இயக்கம் மட்டும் இல்லை, அறிவியக்கம்.

படிப்பகங்களால் வளர்ந்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இன்று பிரமாண்டமான நூலகங்களை கட்டியெழுப்பிக் கொண்டு இருக்கிறோம். 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில், 120 கோடியே 75 இலட்ச ரூபாய் மதிப்பில் இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அழகாகவும், அற்புதமாகவும் உருவாக்கிக் கொடுத்த எதிலும் வல்லவர் என்று அழைக்கப்படும் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாணவர்களின் நெஞ்சம் அறிந்த அன்பு தம்பி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரையும் கடுமையாக உழைத்திருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஷிவ் நாடாருடன் முதலமைச்சர்

பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாத ஷிவ் நாடாரையும் அவரின் மகள் ரோஷினியையும் மாணவ, மாணவியர்களான நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகதான் அழைத்துக் கொண்டு வந்திருக்கின்றேன். மிகப்பெரிய தொழிலதிபர் என்பது அவருடைய பெருமை அல்ல. இந்திய தொழிலதிபர்களில் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கக்கூடியவர் என்று பாராட்டப்படக்கூடியவர். உனக்கு பணம் வரும்போது அதிகப்படியானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இவருடைய தாயார் சொன்னார்களாம். அதற்காகவே அறக்கட்டளை தொடங்கியவர். 50 நாடுகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் வேலை பார்க்கின்ற அளவுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தினை நிறுவிய இவரும் உங்களைப்போல அரசுப் பள்ளியில் படித்தவர்தான். பல கிராமங்களைத் தத்தெடுத்து உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு கிராமத்தில் பிறந்து, மாநகராட்சிப் பள்ளியில் படித்து, மிகச்சிறிய நிறுவனத்தை தொடங்கி, இன்றைக்கு இவ்வளவு பெரிய மனிதராக அவர் உயர்ந்திருக்கிறார். இப்படிப்பட்டவரை உங்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தத்தான் சிறப்பு அழைப்பாளராக  அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் மகள் ரோஷினி அந்த நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பெண்கள் அனைத்துப் பொறுப்புகளிலும் இறங்கிப் பணியாற்ற வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கனவின் அடையாளமாகவும், இவர்கள் இருவரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அனைவரின் சார்பில் என் நன்றி.

குழந்தைகள், மாணவர்கள் – போட்டித் தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் ஆறு தளங்களுடன் மூன்று லட்சம் புத்தகங்களைக்கொண்ட இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க கலைஞரே சிலை வடிவமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

கலைஞரைப் பொறுத்தவரையில் எந்த துறையில் நுழைந்தாலும் அந்த துறையில், அவர்தான் நம்பர் ஒன். பன்முக ஆற்றல் கொண்ட கலைஞரின் பெயரில்தான் பன்முக ஆற்றலை நீங்களும் வளர்த்துக்கொள்ளக்கூடிய இந்த நூலகம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

விழாவுக்கு வந்திருந்த பள்ளி மாணவ மாணவிகள்

கலைஞரே மிகப்பெரிய நூலகம்தான். அவர் எழுதிய புத்தகங்களை வைத்தால் அதுவே பெரிய நூலகம்போல இருக்கும். நெஞ்சுக்கு நீதி மட்டும் ஆறு பாகங்கள்!உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்கள் 54 தொகுதிகளாகவும் சட்டமன்ற உரைகள் 12 பாகங்களாக வெளி வந்திருக்கின்றன. 1945 முதல் அவர் ஆற்றிய உரைகளைத் தொகுத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளாக வெளியிட முடியும். அதனால்தான் கலைஞரே ஒரு நூலகம் என்றேன்.

கலைஞரைப் பற்றி எழுதியவர்கள், ஆய்வு செய்தவர்கள், அவர் மாதிரியே எழுதியவர்கள் என்று தமிழ்நாட்டில் ஒரு எழுதுகோல் படையையே வைத்திருந்தார். கலைஞர் பரம்பரை என்றே ஒன்று இருக்கிறது. இந்த கலைஞர் பரம்பரைதான் தமிழ்நாட்டை வாழையடி வாழையாக வளர்த்தெடுக்கின்ற பரம்பரை.

பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் அதிகம் வந்திருக்கிறீர்கள், கலைஞருடைய வாழ்க்கையில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் எவ்வளவோ இருக்கிறது.

திருவாரூர் பக்கத்தில் திருக்குவளையில் முத்துவேலர் அஞ்சுகம் அம்மையாருக்கு பிறந்தவர், உங்களைப்போல மாணவராக இருந்த காலத்தில்தான் மொழிக்காகவும், இனத்துக்காகவும் போராடத் தொடங்கினார். உங்களைப் போலவே, பள்ளியில் படிக்கின்ற காலத்தில் தமிழ்ப் பற்று இருந்ததால்தான் எழுத்தாற்றல் பெற்று, போராட்டகு குணத்தின் காரணமாக மிகப்பெரிய தலைவரானார் கலைஞர்.

பள்ளியில் நன்றாகப் படி என்று அண்ணா சொன்னாலும், கலைஞர் படித்தது என்னவோ, அண்ணாவின் கொள்கைப் பள்ளியிலும், பெரியாரின் போராட்டக் கல்லூரியிலும்தான்.

மு.க.ஸ்டாலின்

கலைஞருக்குள்ளே இருந்த அந்தப் போராளிதான் இன்றைக்கு பலரும் படிக்க காரணம். படிப்பும், வேலைவாய்ப்பும் நம்முடைய உரிமை என்று கிளர்ந்தெழுந்த இனம்தான், திராவிட இனம். எத்தனை தடைகள் வந்தாலும், படிப்பை மட்டும் நீங்கள் யாரும் கைவிடக் கூடாது. படிப்பு மட்டும்தான் யாராலும் திருட முடியாத நிலையான சொத்து.

அந்தப் படிப்பை நாம் எல்லோரும் அடையவேண்டும் என்ற கலைஞர் உருவாக்கியதுதான் நவீன தமிழ்நாடு. இன்றைக்கு தமிழ்நாட்டில் நீங்கள் பார்க்கின்ற பெரும்பாலானவை கலைஞரால் உருவாக்கப்பட்டவை.

கல்விப் புரட்சியை ஏற்படுத்தியது தி.மு.க ஆட்சி. புகுமுக வகுப்பு, இலவசக் கல்வி என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் பள்ளிகளை நோக்கி வந்தார்கள். இதை அறிந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களே, `எனக்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது, கருணாநிதியிடம் சென்று சொல்லுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார்.

அந்த பெருந்தலைவர் பிறந்த நாளில்தான் நூலகத்தை இன்றைக்கு நாம் திறந்து வைத்திருக்கிறோம். தரமான கல்வி வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்துப் பணிகளையும் செய்து கொண்டிருக்கிறோம். இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கம், பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களின் பசியை போக்க காலை உணவுத் திட்டம் என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் உயர்கல்வி படிக்க வேண்டுமென்று சொன்னால், அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற புதுமைப்பெண் திட்டம், வருகிற செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப் போகிறோம்.

தகுதியுடைய குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகிறது. உங்கள் குடும்பத்தில் உங்கள் அம்மாவே இதனை பெறுவார்கள். இத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான பெரிய சமூகநலத் திட்டம் இதுவரை இல்லை என்று சொல்கின்ற மாதிரி மாபெரும் திட்டமாக அந்தத் திட்டம் உருவாக்கப்பட இருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்லும் திராவிட மாடல் கோட்பாடு இதுதான். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். மக்களுக்கு பணி செய்ய, தொண்டு செய்ய கிடைத்த வாய்ப்பாகதான் ஆட்சிக்கு வந்து இருப்பதையும், முதலமைச்சர் என்கின்ற நாற்காலியில் அமர்ந்திருப்பதையும் நான் நினைக்கிறேன்.

தமிழ்நாடு அனைத்துத்துறைகளிலும், முன்னேறி இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக ஆகவேண்டும். அந்த ஒற்றை இலக்குடன்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

மாணவக் கண்மணிகளுக்கு நான் சொல்வது, அரசு உருவாக்கித் தரக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிக்கின்ற காலத்தில் கவனச் சிதறல்கள் வேண்டாம். படிப்பு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படுங்கள். நாளைய நம்பிக்கை நீங்கள். நாளைய எதிர்காலம் நீங்கள். உங்கள் பெற்றோர் மட்டுமல்ல, இந்த நாடே உங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. நிறைவாக, புத்தகத்தில் உலகைப் படிப்போம், உலகத்தை புத்தகமாய்ப் படிப்போம் என்ற கலைஞரின் வரிகளோடு முடிக்கிறேன்” எனக் கூறி முடித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *