Chennai
oi-Kadar Karay
மாநிலத் திட்டக்குழு சார்பாக தமிழ்நாடு முழுக்க நடத்தப்பட்ட ஆய்வில், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் மருத்துவச் செலவுகள் குறைந்திருப்பது எனத் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் குறைந்த வருமானத்தைப் பெறும் மக்களின் மருத்துவச் செலவுகள் என்பது பாதியாகக் குறைந்துள்ளதாக மாநிலத் திட்டக்குழு நடத்தியுள்ள சர்வே மூலம் தெரியவந்துள்ளது.
வீடுகளுக்கே சென்று சிகிச்சை: கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தில் சுகாதார தன்னார்வலர்கள், அரசு செவிலியர்கள், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள் எனப் பலரும் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்து வருகின்றன.
குறிப்பாக, முறையாகப் போக்குவரத்து வசதிகள் இல்லாத மலைக்கிராம மக்கள், பழங்குடி மக்கள், பட்டியலின மக்கள் எனப் பலரும் இத்திட்டத்தால் பலனடைந்துவருகின்றன.
இந்நிலையில்தான் 30வயதுக்கும் மேற்பட்டவர்களிடம் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் குறித்து மாநிலத் திட்டக்குழு சர்வே ஒன்றை நடத்தி, அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போது அதன் விபரங்கள் வெளியாகி உள்ளன.
குறைந்த வருவாய் ஈட்டும் மக்கள்: அதன்படி குறிப்பாகக் குறைந்த வருவாய் ஈட்டும் மக்கள் குடும்ப வருமானத்தில் 10 சதவீதத்தை உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சைகளுக்குச் செலவிட்டு வந்துள்ளனர் என்றும் அரசின் இத்திட்டத்தின் மூலம் அவர்களின் செலவீனம் பாதியாகக் குறைந்துள்ளது என்பது அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதாவது இந்நோய்களுக்காக 300 முதல் ஆயிரம் வரை மக்கள் இதற்கு முன்னதாக செலவு செய்துவந்ததாகவும் அச்செலவு இப்போது 200 ரூபாயாகக் குறைந்துள்ளது என்றும் மாநிலத் திட்டக்குழு ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
அதைப்போன்றே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்குச் சிகிச்சை பெறும் 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையானது 25% இருந்து 36% ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இவர்களில் நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்த நோயால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் குறிப்பாக நகர்ப்புற மக்கள் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுவதாகவும், அதில் ஆண்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குறித்தும் அதன் முடிவுகள் குறித்தும் மாநில திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் அமலோற்பவநாதனிடம் சில விளக்கங்களைக் கேட்டோம். அவர் இந்த சர்வேயின் நோக்கம், திட்டம் ஏற்படுத்தியுள்ள நேர்மறையான தாக்கங்கள் குறித்து மிக விரிவாக எடுத்துச் சொன்னார்.
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன? “இந்த ஆய்வின் முடிவுகள் பற்றி விவரமாக பின்னால் பேசுவோம். முதலில் இந்த ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தின் குறிக்கோள் என்ன என்பதைப் பற்றி விளக்கிவிடுகிறேன். தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் மாநிலம் முழுவதும் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் என்பது பரவலாக இயங்கி வருகிறது. அதில் எந்தக் குறைபாடுகளும் இல்லை. இந்த அளவுக்குப் பரவலாக இருந்தும் சில மக்களால், இதன் பயனைப் பெற முடியவில்லை. அதில் சில தடைகள் உள்ளன.
அந்தத் தடைகள் என்ன? என்றால் வயது முதிர்வு. பலர் வயதான காலத்தில் ஒரு இடத்திலிருந்து பயணித்து மற்றொரு இடத்திற்குச் சென்று மருத்துவம் எடுத்துக் கொள்வதில் சிரமங்கள் நிலவுவதை அரசு கண்டறிந்தது. முறையாக மருத்துவர்கள் அறிவுறுத்தும் தொடர் சிகிச்சைக்கு அவர்கள் சரியாகச் செல்வதில்லை. அதில் சில சுணக்கங்கள் நிலவுகின்றன.
அதற்கு அடுத்த 2ஆவது தடை என்பது பலர் காலையிலேயே தங்களின் அன்றாட கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அந்த வேலையைவிட்டால், அவர்களின் குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்படும். அதனால், உரியக் காலத்தில் தங்களின் நோய்களுக்குச் சரியான சிகிச்சையைப் பலர் எடுத்துக் கொள்வதில்லை. அதில் காலதாமதம் ஏற்பட்டு, வியாதி முற்றிய பிறகு மருத்துவம் பார்க்க வருகிறார்கள் என்பதையும் அரசு முன்கூட்டியே கண்டறிந்திருந்தது.
தடைகளைத் தாண்டிய மருத்துவம்: இவற்றைத் தாண்டி மூன்றாவது பொது போக்குவரத்து சரியாக இல்லாத கிராமங்களில் வசிக்கும் மக்களால்கூட ஆரம்பச் சுகாதார நிலையங்களின் சேவையைப் பெற முடியவில்லை என்பதும் தெரியவந்ததிருக்கிறது.
இந்தக் குறைபாடுகளை எல்லாம் கண்டறிந்ததால்தான், ‘திராவிட மாடல்’ அரசு 2021இல் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தையே அறிமுகம் செய்தது. அதனை முதலமைச்சர் ஸ்டாலின் தான் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக 50 பகுதிகளில் தொடங்கினார்கள். அதற்குப் பின்னால், தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தினார்கள். இதுவரை இத்திட்டத்தால் 2 கோடிக்கு மேலான மக்கள் பயனடைந்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது.
இப்போது நீங்கள் முதலில் கேட்ட கேள்விக்கு வருகிறேன். இத்திட்டம் 2 கோடி பேருக்குப் பயனளித்திருந்தாலும், இதனால் மாநில மக்களுக்கு வேறு என்ன பயன்கள் கிடைத்திருக்கின்றன என்பதை அறிய மாநிலத் திட்டக்குழு சர்வே எடுத்தது. இந்த சர்வேவை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆய்வாளர்களை வைத்து எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 9 மருத்துவக் கல்லூரிகள் இதில் பங்குபெற்றன.
ஒவ்வொரு குழுவும் தங்களின் பகுதியில் உள்ள 6 ஆயிரம் குடும்பங்களுக்குச் சென்று, அதாவது ‘மக்களைத் தேடி மருத்துவம்’ பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று இந்த சர்வேவை நடத்தினார்கள். கடந்த ஒரு ஆண்டில் தமிழ்நாட்டில் புதியதாகக் கண்டறியப்பட்ட நீரிழிவு நோயாளிகளில் 66 விழுக்காடு நோயாளிகள் ‘மக்களைத் தேடி மருத்துவக் குழு’வால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரம் கிடைத்துள்ளது.
ரத்த அழுத்த நோயாளிகளில் 75% பேர்: இதில் 50விழுக்காடு அளவுக்கான நோயாளிகள் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ மூலம்தான் மருந்துகளைப் பெற்றுவருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதிலும் கூட கிட்டத்தட்ட 30% நோயாளிகளுக்கு மருத்தானது வீட்டுக்கே சென்று சேர்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது ஆய்வின்படி 10% நீரழிவு நோயாளிகளுக்கு நோயின் தாக்கமானது கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.
அடுத்து ரத்த அழுத்தத்திற்கு வருவோம். கடந்த 1 ஆண்டில் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரத்த அழுத்த நோயாளிகளில் 75% பேர் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தால்தான் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் 63% நோயாளிகளுக்கு மருத்துகள் இத்திட்டம் மூலமே சென்றடைந்துள்ளது. 45% பேர் வீடுகளுக்கே மருத்துகள் போய்ச் சேர்கின்றன. 35% ரத்த அழுத்த நோயாளிகள் இத்திட்டத்தின் பலனால் தங்களின் பிபி அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இதைப்போன்றே stroke, paralysis ஆகிய நோய்களால் தாங்கப்பட்ட நோயாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் வீட்டில் வைத்தே எக்ஸ்சர்சைஸ் சொல்லித் தருகிறோம். இதற்காக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ மூலமாக பிசியோதெரபிஸ்ட்களை வீட்டுக்கே அனுப்புகிறோம். 48% நோயாளிகள் இத்திட்டத்தின் மூலமாகக் கிராமத்திலிருந்தபடியே சிகிச்சையைப் பெற்றுள்ளனர் என்பது மாநிலத் திட்டக்குழுவின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
டயாலிசிஸ் தேவைப்படும் 52% நோயாளிகள்: இது தவிர டயாலிசிஸ் தேவைப்படும் 52% நோயாளிகள் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ மூலமாகவே பலனைப் பெற்றுள்ளனர். இவை யாவும் மாபெரும் சாதனைகள். அதுவும் கடந்த ஒரு ஆண்டுக்குள் செய்யப்பட்ட சாதனைகள்” என்கிறார் அமலோற்பவநாதன்.
அவரிடம் நமக்கு இருந்த சந்தேகங்கள் தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்தோம். அதாவது அரசு முன்னதாகவே இலவசமாகவே அரசுப் பொது மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வருகிறது. அப்படி இருக்கும் போது மக்களைத் தேடி மருத்துவத்தால் மக்களின் மருத்துவ செலவீனங்கள் குறைந்துள்ளதாகத் திட்டக் குழு கூறுவது எந்தவகையில் எனக் கேட்டோம்.
அதற்கு அவர், “மக்கள் தங்களின் பாக்கெட்டில் இருந்து செலவு செய்வதை out-of-pocket expenditure என்று சொல்வோம். உலகத்திலேயே இந்தியாவில்தான் out-of-pocket expenditure என்பது அதிகமாக இருந்தது. தமிழ்நாட்டிலும் அது அதிகமாகவே இருந்தது. இது நமக்குக் கவலை அளிக்கக் கூடிய செய்திதான்.
அதாவது இவ்வளவு சேவைகளை அரசு கொடுத்தும், ஏன் மக்கள் தங்களின் பாக்கெட்டில் இருந்து அதிகமான பணத்தைச் செலவு செய்ய வேண்டி உள்ளது? நாங்கள் எங்களின் சர்வேவை தொடங்குவதற்கு முன்னால், ஒவ்வொருவரும் தங்களின் ஒரு வியாதிக்காகக் கிட்டத்தட்ட 500 ரூபாய் செலவு செய்கிறார்கள் என்பதை அறிந்தோம்.
500 ரூபாய் செலவு 200 ஆனது எப்படி? ஆனால், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ போய்ச் சேர்ந்த வீடுகளில் நான் முன்பே சொன்ன 500 ரூபாய் என்பது 200 ரூபாயாகக் குறைந்துள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு வியாதிக்கும் 300 ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, மருத்துவமே வீடு தேடி வருகிறது. அவர்கள் சிகிச்சைக்காக வெளியே அலைவது இல்லை. மருந்து வாங்குவதற்காகக்கூட அவர்கள் பயணிப்பதில்லை. வீடுகளுக்கே சென்று விநியோகிக்கப்படுகிறது.
ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது! ஸ்டாலினை பாராட்டும் செல்வப்பெருந்தகை!
இதனால், நோயின் தாக்கம் முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, நல்ல உடல் முன்னேற்றத்தை அடைகின்றனர். ஆக, பல விதங்களில் அவர்களின் போக்குவரத்து செலவு குறைகிறது. மற்ற செலவுகளும் குறைகின்றன” என்றார் மருத்துவர் அமலோற்பவநாதன்.
English summary
state planning commission report released about makkalai thedi maruthuvam scheme