மேலும், “இந்த திரிணாமுல் காங்கிரஸ் கிரிமினல், இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்தார். யாரோ ஒருவர் அவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்க வேண்டும். இதை நீங்கள் மன்னிப்பீர்களா? தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் இப்படி நடந்ததற்காக, நீங்கள் பழிவாங்க மாட்டீர்களா? காந்தியின் மூன்று குரங்குகளைப்போல, இந்தியா கூட்டணி தலைவர்கள் கண்களையும், காதுகளையும், வாயையும் மூடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று விமர்சித்தார் பிரதமர் மோடி.
இந்த விவகாரத்தில் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சாஷி பஞ்சா, “பிரதமர் மோடி பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்துப் பேசுகிறார். ஆனால், பெண்களுக்கு எதிராக கொடுங்குற்றங்கள் அரங்கேறிய கலவர பூமியாகக் காட்சியளித்த மணிப்பூர் பற்றி அவர் கவலைப்பட்டாரா… அங்கு சென்று பார்த்தாரா?” எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாந்தனு சென், “லட்சத்தீவில் ஸ்நோர்கெலிங் செய்ய பிரதமர் செல்கிறார், ஆனால் மணிப்பூருக்குச் செல்ல அவருக்கு நேரம் கிடைக்கவில்லை” என விமர்சித்திருக்கிறார்.
சந்தேஷ்காளியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டு கொந்தளித்துதான் போனார் பிரதமர் மோடி. நியாயம்தான். ஆனால், மணிப்பூரில் பழங்குடியினப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு கயவர் கூட்டம் வீதியில் இழுத்துச்சென்றபோது, பிரதமர் மோடிக்கு இவ்வளவு கோபமும் ஆத்திரமும் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது!