அப்போது நீதிபதி சந்திரசூட், “தொழிற்சாலையை மூடுவது சந்தேகத்திற்கு இடமின்றி விருப்பமான விஷயமல்ல. இருப்பினும், மீண்டும் மீண்டும் நடந்த விதிமீறல்களின் தீவிரத்தன்மையால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் அனைத்தும், அதிகாரிகளாலோ அல்லது உயர் நீதிமன்றத்தாலோ கவனக்குறைவாக கையாளப்பட்டதாகத் தெரியவில்லை. சட்டபூர்வ அதிகாரிகள் பல ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளை நீதிமன்றத்தில் சமர்பித்திருக்கின்றனர். அதன் அடிப்படையில்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கியிருக்கிறது.
உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறையில் கடுமையான தவறு எதுவும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, அதில் உச்ச நீதிமன்றம் தலையிடவேண்டிய அவசியமில்லை. மேலும், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை தவறு எனவும் கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்க அனுமதிக்க முடியாது. தமிழ்நாடு அரசு, ஆலையை மூடி சீல் வைத்தது சரியானதுதான்.