குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், ‘உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும், சிறப்பு முகாம் என்ற பெயரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத ஒரு வதைக்கூடத்தில் இவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, கடுமையான மனஉளைச்சலுக்கும், உடல் பாதிப்புகளுக்கும் ஆளாகிய நிலையில், தங்கள் தாயகத்துக்குத் திரும்ப வேண்டுமென்று சாந்தன் தொடர்ந்து மன்றாடினார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவர் தாய்நாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்பது வேதனைக்குரியது’ என்று கூறியிருக்கிறார்.
மேலும், ‘பேரறிளவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழகத்தில் தங்கள் குடும்பத்தினருடன் வசிக்கிறார்கள். அவர்களால் சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல, முருகனும், ராபர்ட் பயஸும், ஜெயக்குமாரும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்குக்கோ, இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கோ, எந்த பாதிப்பும் ஏற்படுத்துபவர்கள் அல்ல.
உச்ச நீதிமன்றமே இவர்களை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய பிறகும், சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகும், வெளியுறவு நலன் கருதி, தேசத்தின் நலன் கருதி, சிறப்பு முகாமில் அவர்களை அடைத்துவைப்பது சட்டத்துக்கும், இயற்கை நியதிக்கும் எதிரானது. எனவே, தற்போது சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை அவர்கள் விரும்புகிற பகுதிகளில் வசிப்பதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்’ என்றும் திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார்.