ஆனால், இதை ஏன் அப்போதே கூறவில்லை என அவர் பக்கமே பா.ஜ.க மடைமாற்றியது. மேலும், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த அடுத்த சில நாள்களிலேயே, 2018 ஆகஸ்ட் 23 முதல் 2019 அக்டோபர் 30 வரையில் அவர் ஆளுநராக இருந்தபோது, அரசு ஊழியர்களின் காப்பீடு தொடர்பான ஊழல் குறித்த ஆவணங்களை அழிப்பதற்காக ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் சி.பி.ஐ விசாரணைக்கு அவர் ஆளானார்.
சி.பி.ஐ-யின் இத்தகைய சோதனைக்கு எதிர்வினையாற்றிய சத்யபால் மாலிக், “கடந்த 3 – 4 நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். ஆனாலும், அரசு அமைப்புகள் மூலம் சர்வாதிகாரிகளால் எனது வீடு சோதனையிடப்படுகிறது. என்னுடைய ஓட்டுநர், உதவியாளரையும் சோதனை செய்து தேவையில்லாமல் துன்புறுத்துகின்றனர். நான் ஒரு விவசாயியின் மகன், இந்தச் சோதனைகளுக்கு நான் பயப்பட மாட்டேன். நான் விவசாயிகளுடன் இருக்கிறேன்” என்று தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.