குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்..!
மத்திய இடைக்காக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் அதிக கவனம் பெற்றிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.