“தை மாதம் பிறந்தாலே மூர்த்தி, `ஜல்லிக்கட்டு மூர்த்தி'யாக மாறிவிடுவார்!" – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Img 20240124 142642.jpg

“மதுரை தூங்கா நகரம் மட்டுமல்ல; போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியை தூள் தூளாக்கும் நகரம்..” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாகமாகப் பேசினார்.

ஜல்லிக்கட்டு அரங்கம்

ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை’ இன்று திறந்து வைத்தார் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்பு விழாவில் பேசும்போது,  “வீரர்களும், தீரர்களும் வாழும் மதுரை மண்ணில், ஏறுதழுவுதல் அரங்க திறப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அமைச்சர்களே, அலுவலர்களே, வீரம் செறிந்த காளைகளை வளர்த்த குடும்பத்தினர்களே, காளைகளை தழுவ இருக்கும் இளம் காளையர்களே அனைவருக்கும் வணக்கம்.

மதுரையை தூங்கா நகரம் என்பார்கள். போட்டி என்று வந்துவிட்டால், தோல்வியை தூள் தூளாக்கும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.
தமிழர் பண்பாட்டு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு, சங்கம் வளர்த்த மதுரையில் இந்த மாபெரும் அரங்கம் தி.மு.க அரசால் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதுவும், தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடுகிற ஆண்டில் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

ஜல்லிக்கட்டு அரங்கம்

பல்லாயிரம் ஆண்டுகள் பெருமையுடன் தமிழினம் கொண்டாடும் ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் இந்த ஸ்டாலின் என்று, வரலாற்றில் என் பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை. ஆட்சி அமைந்து, மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருக்கின்றன. அதற்குள்ளாக, மூன்று முக்கியமான கம்பீரச் சின்னங்களை மதுரையில் ஏற்படுத்தியிருக்கோம்.

மதுரைக்கு அருகில் தமிழினத்தின் பழமையை சொல்கின்ற கீழடி அருங்காட்சியகம், கலைஞரின் பெயரால் பிரமாண்டமாக நூலகம், இப்போது இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்.

இதை சொல்லும் நேரத்தில், 2015-ம் ஆண்டு அறிவித்து, இன்றைக்கு வரை மதுரைக்கு ஒன்றிய பா.ஜ.க அரசால் கொண்டு வரப்படாத ஒரு திட்டம், உங்கள் ஞாபகத்திற்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை.

இந்த அரங்கத்தை கம்பீரமாகவும், அழகாகவும் அமைத்துக் கொடுத்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை பாராட்டுகிறேன். அவருடைய சாதனைப் பட்டியலிலில் இது சேர்ந்துவிட்டது. சென்னையில் கலைஞர் நினைவகமும் விரைவில் திறக்கப்படவிருக்கிறது.

இந்த விழாவை மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ளார் நம் அமைச்சர் மூர்த்தி. தை மாதம் பிறந்தாலே மூர்த்தி, ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறிவிடுவார். கோட்டைக்குக்கூட வராமல் ஜல்லிக்கட்டு மைதானத்திலேயே இருந்துவிடுவார். அந்தளவுக்கு ஏறுதழுவுதலை தனது உயிராகக் கருதக்கூடிய மூர்த்தியை நான் பாராட்டுகிறேன்.

ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா

இந்த பண்பாட்டுச் சின்னம், தமிழினத்தின் பண்பாட்டு மரபின் தொடர்ச்சி, சிந்து சமவெளி காலத்து முத்திரைகளிலேயே திமில் காளைகள் இருக்கின்றன. அந்தக் காளைகளின் நேர்கொண்ட பார்வையை நாம் பார்க்கலாம்.

தை மாதம் தொடங்கி பொங்கலுக்காக முதல் மூன்று நாள்கள், அரசு கருவூலத்தை தவிர மற்ற பொது அலுவலகங்களை மூடவேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து ஆளுநர் அறிவித்திருக்கிறார். தமிழர்களின் பண்பாட்டை சரியாக அறிந்தவர்களாக, அந்தக் காலத்து ஆளுநர்கள் இருந்திருக்கிறார்கள். ஆண்டுதோறும் தை மாதம் அலங்காநல்லூரும், அவனியாபுரமும், பாலமேடும் உற்சாகத்தோடு காணப்படும்.

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவல் அரங்கம்

இந்த பண்பாட்டுத் திருவிழா உலகம் முழுவதும் பேசப்படும் என்றுதான், இந்த அரங்கத்தை அமைக்கும் முடிவை எடுத்தோம். தலைவர் கலைஞருக்கு ஏறுதழுவுதல் போட்டி மேல், தனி பாசம் உண்டு. அதனால்தான், தன்னுடைய மூத்த பிள்ளையான முரசொலியின் (நாளிதழ்) சின்னமாக, ஏறுதழுவுதல் காட்சியை வைத்தார்.

1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் ஏறுதழுவுதல் போட்டிகளை நடத்திதினார். ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்றவற்றை 2006-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தடை செய்தபோது, பாதுகாப்பான முறையில் நாங்கள் நடத்துவோம் என்று உறுதி அளித்து, அனுமதியை பெற்றார்.

2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோதும், தடையை நீக்குவதற்காக வலுவான வாதங்களை வைத்து வாதாடியதும்… போட்டிகள் நடத்தலாம் என்று அனுமதியைப் பெற்றதும் தி.மு.க ஆட்சியில்தான்.

ஆட்சி மாறியதும், 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் வந்தது. நம்முடைய இளைஞர்கள் சேர்ந்து, மெரினா புரட்சி என்று சொல்கின்ற அளவிற்கு 2017-ல் மிகப்பெரிய மக்கள் போராட்டம் சென்னையில் நடந்தது.

அமைதி வழியில் போராடியவர்கள் மேல் வன்முறையை ஏவி கூட்டத்தை கலைத்தது அன்றைக்கு இருந்த அ.தி.மு.க அரசு. அவர்களே ஆட்டோக்களுக்கு தீ வைத்து கொளுத்திய கொடுமையான காட்சியெல்லாம் அப்போது வெளியானது.

ஜல்லிக்கட்டு அரங்கில் கருணாநிதி சிலை திறப்பு

தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டங்களுக்கு, அ.தி.மு.க ஆட்சி அடிபணிந்த பிறகுதான், மீண்டும் ஏறுதழுவுதல் போட்டிகளை நடத்துகிற நிலை உருவானது. ஆனாலும், நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கில், ஒன்றிய அரசு என்ன சொன்னது தெரியுமா… `ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி உள்ளிட்ட போட்டிகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும், கேலோ இந்தியா உள்ளிட்ட எந்தத் திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை’ என்று தெரிவித்தார்கள்.

அரசின் தீவிர முயற்சியால், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கடந்த ஆண்டு மே மாதம் பெற்றோம். இவ்வளவு தடைகளையும் தி.மு.க. அரசு உடைத்து எறிந்ததால்தான், இன்றைக்கு ஏறுதழுவுதல் போட்டி கம்பீரமாக நடக்கிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *