ஐ.நா சபையின் போர் நிறுத்தத் தீர்மானத்துக்குப் பிறகும், தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிகழ்ந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக 2.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இடப் பற்றாக்குறை, பாதுகாப்பற்ற சூழலால், லட்சக்கணக்கான பாலஸ்தீனக் குடிமக்கள் சாலைகளிலும், மைதானங்களிலும், தற்காலிக கூடாரங்களை அமைத்துத் தங்கிவருகிறார்கள்.
கடும் குளிரிலும், மழையிலும், வெள்ளத்திலும் போதிய மருத்துவச் சிகிச்சை, உணவு, தண்ணீர் இல்லாமல் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். காஸாவின் உள்கட்டமைப்பு பெரிதும் சிதைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், இஸ்ரேல், “எங்களின் முக்கியக் கூட்டாளிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், சர்வதேச ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஹமாஸுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடரும்” எனக் குறிப்பிட்டது. இந்த நிலையில், நேற்று அல்-மகாசி அகதிகள் முகாமில் வான்வழித் தாக்குதல் நடந்திருக்கிறது.