பா.ஜ.க ஆளும் மணிப்பூர் மாநிலத்தில், பெரும்பான்மைச் சமூகமான பழங்குடியல்லாத மைதேயி இனக்குழுவுக்கும், பழங்குடிச் சமூகமான குக்கி இனக்குழுவுக்கிடையே மே 3-ம் தேதி முதல் வன்முறை வெடிக்கத் தொடங்கியது. ஆனால் இதுவரை மத்திய அரசு அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியா ஆடவர் ஹாக்கி அணியின் வீரரான நீலகண்ட சர்மா, மணிப்பூரில் நிலவும் நிலைமையை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார். மணிப்பூரைச் சேர்ந்த இவர் தற்போது ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்காக சென்னையில் ஹாக்கி அணியுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகண்ட ஷர்மா ஆங்கில செய்தித்தாள் (New Indian Express) ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மணிப்பூரில் நிலவும் நிலைமையை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தெரிவிக்க வேண்டும். என் மாநிலத்தை பற்றி நான் என்ன சொல்ல முடியும்? நான் சொல்லி எதுவும் மாறப் போவதுமில்லை. ஆனால் மோடி ஜி எங்களுக்காக ஏதாவது பேசுவார் என்று நம்புகிறேன்” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், “என்னுடையக் குடும்பத்தினர் இம்பாலில் நலமாக இருக்கின்றனர். அவர்கள் வாழும் பகுதியில் பிரச்னைகள் எதுவும் இல்லை. மலைப்பாங்கான பகுதியில் தான் பிரச்னை இருக்கிறது. நான் கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு இம்பால் சென்றிருந்தேன், அப்போது நிலைமை இவ்வளவு மோசமாக இல்லை” என்றார். கடந்த கோவா தொடரில், மணிப்பூர் சப்-ஜூனியர் ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்த லைஸ்ராம் ரிவால்டோ மைதேகி, மே 5-ம் தேதி கிழக்கு இம்பால் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, நீலகண்ட சர்மா இவ்வாறு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.