Thiruvananthapuram
oi-Mani Singh S
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆற்றின் அருகே போட்டோஷூட் நடத்த சென்ற புதுமண தம்பதி கால் தவறி ஆற்றுக்குள் விழுந்ததில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த அவர்களது உறவினரும் பலியாகினார்.
புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் போட்டோஷூட் செய்து கொள்ளும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதற்காக பல ஆயிரம் முதல் லட்சங்கள் வரை பலரும் செலவு செய்கிறார்கள். போட்டோஷுட்டிற்காக வித்தியாசமான இடங்களுக்கு செல்வது.. இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு சென்று போட்டோ ஷுட் எடுத்துக் கொள்ள தற்போது பலரும் விரும்புகிறார்கள்..
இப்படி வித்தியாசமாக போட்டோஷூட் நடத்த நினைத்து சில நேரங்களில் ஆபத்தில் சிக்கிவிடும் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணமாக ஆபத்தான இடங்களில் இருந்து போட்டோஷூட் எடுப்பதே ஆகும். கேரளாவில் இதுபோன்ற போட்டோஷூட் தான் தற்போது ஆபத்தில் முடிந்து இருக்கிறது. திருமணம் ஆன ஒரே வாரத்தில் புதுமண தம்பதிகள் உயிரிழந்து உள்ளனர். இந்த சோக சம்பவம் குறித்த விவரம் வருமாறு: –
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவருடைய மனைவி நவுபியா. கடந்த ஒரு வாரத்திற்கு முன் தான் இவர்களுக்கு திருமணம் முடிந்தது. புதுமண தம்பதியான இந்த ஜோடி பள்ளிக்கால் பகுதியில் உள்ள தங்கள் உறவினராக அன்சில் என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். விருந்தை முடித்து விட்டு அங்குள்ள ஆற்றுக்கு சென்றுள்ளனர். உறவினர் அன்சிலும் அவர்களுடன் சென்றுள்ளார்.
இயற்கை காட்சிகளையும் அங்குள்ள ரம்மியான சூழலையும் அனுபவித்த புதுமண தம்பதியினர் ஆற்றை பார்த்ததும் போட்டோ எடுக்க திட்டமிட்டனர். இதற்காக ஆற்றின் கரையோரம் இருந்த பாறையின் மேல் நின்று புகைப்படம் எடுத்தனர். அப்போது நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தனர். ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் உதவி கேட்டு அலறினர். இதைப்பார்த்த உறவினரான அன்சிலும் சற்றும் யோசிக்காமல் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்தார்.
ஆனால் அவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் , தீ அணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் ஆற்றில் மூழ்கிய 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர தேடுதலுக்கு பிறகு அன்சில் சடலமாக மீட்கப்பட்டார்.
எனினும், புதுமண தம்பதி உடல்கள் கிடைக்கவில்லை. இரவு நேரமானதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது. இதில் பாறை இடுக்கில் தம்பதியின் உடல்கள் சிக்கியிருப்பதை தீயணைப்பு படையினர் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதுமண தம்பதிகளின் போட்டோஷூட் ஆர்வம் அவர்களின் உயிரையே காவு வாங்கிய சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English summary
A newlywed couple who went to conduct a photoshoot near a river in Kerala lost their footing and fell into the river and were swept away and tragically died. Their relative who jumped into the river to save them also died.
Story first published: Monday, July 31, 2023, 1:45 [IST]