Chennai
oi-Arsath Kan
சென்னை: அத்திக்கடவு -அவிநாசி திட்டத்துக்கு நிலம் தந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு போதிய இழப்பீடு கொடுக்கவில்லை என்ற பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவகாரத்தை வாசன் கையில் எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;
”கோவை, திருப்பூர், ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கனவுத் திட்டம் அத்திக்கடவு அவினாசி திட்டம். இத்திட்டம் கடந்த ஆட்சிகாலத்தில் ரூபாய் 1,652 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்டது. அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுவதின் மூலம் கொங்கு மண்டலத்தில் உள்ள 31 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 538 நீர்நிலைகளில் நீர் நிரப்பப்படும்.
இதன் மூலம் அப்பகுதியில் வாழும் 35 லட்சம் மக்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். அதோடு 1.30 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இத்திட்டத்திற்கு நிலம் அளித்தவர்களுக்கு அதிகபட்ச நஷ்டஈடு வழங்கப்படும் என்று அரசு அளித்த வாக்குறுதியின் படி வழங்காமல் காலம் தாழ்த்துகிறது.
அத்திக்கடவு -அவினாசி திட்டப் பணிகள் இந்த மாதம் இறுதியில் நிறைவடையும் – அமைச்சர் முத்துசாமி
இதனால் விவசாயிகள் மகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே தமிழக அரசு அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தாமதம் இல்லாமல் நிறைவேற்ற உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நஷ்டஈட்டை உடனடியாக வழங்க வேண்டும்.”
English summary
Tamil Maanila Congress President GK Vasan has requested the government to provide compensation to those who gave land for Athikadavu-Avinashi project.
Story first published: Sunday, July 30, 2023, 17:17 [IST]